ஆதவ் பற்றிய அப்டேட் எங்கே? விசாரணையில் விஜய்: திருமாவின் தடுமாற்றங்கள்..!
சென்னை: விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைவதற்காக வாய்ப்புகள் இருக்கிறதா? அல்லது அவர் வேறு என்ன முடிவுகளை எடுக்கலாம் என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்தே 6 மாதங்கள்தான் ஆகின்றது. அதற்குள் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காகக் கட்சியில் சேர்ந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்குள் புதியதாக வந்த ஒருவர் கட்சியின் தலைமையை மீறிச் செயல்படும் அளவுக்கும் கருத்துச் சொல்லும் அளவுக்கும் வளர்ந்துள்ளார் என்றால், அதற்கு என்ன காரணம்? விசிகவில் வேறு யாருக்குமே குறுகிய காலகட்டத்திற்குக் கிடைக்காத அதிகாரம் இவருக்கு எப்படிக் கிடைத்தது என்பதும் விடை தெரியாத வினாக்களாகவே உள்ளன.

அடிப்படையில் ஆதவ் அர்ஜுனா தேர்தல் வியூகங்களுக்கு ஏற்ப காய்களை நகர்த்தக் கூடியவர். அதுதான் அவரது முழுநேர தொழிலாக இருக்கிறது. அவரே திமுகவுக்கு ஐபேக் பிரசாந்த் கிஷோரை அழைத்துக் கொண்டு வந்ததே தான் தான் என்று சொல்லி இருக்கிறார். அந்தக் கட்சிக்காக தேர்தல் வேலைகளைச் செய்தவர் நேரடியாக திமுகவில் இணையவில்லை. பின்புலமாகவே இருந்துள்ளார். ஆனால், விசிகவில் முதலில் திருமாவளவனின் சமூக வலைதளப் பக்கங்களை நிர்வகிப்பவராக அறிமுகமாகி பின்னர் கட்சியின் ஐடி விங்கை கைப்பற்றி இருக்கிறார். அவர் சொல்வதைப் போல 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டை இவரது நிறுவனம் தான் கவனித்திருக்கிறது. அதன் பின் கட்சியில் நேரடியாகவே இணைந்தார். உடனடியாக அவருக்கு து. பொ. செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
கடந்த 2024 தேர்தலில் இவருக்காகவே திருமா ஒரு பொதுத் தொகுதியைக் கேட்டதாகப் பேச்சுகள் அடிபட்டன. இறுதிவரை 3 தொகுதிகள் என்று உறுதியாக நின்ற திருமா பின்னர் அதில் சமரசம் செய்துகொண்டார். கட்சியில் இணைந்த உடன் பதவி, எம்பி சீட்டு என ஆதவ் அர்ஜுனாவுக்குச் சாதகமாக திருமா செயல்பட வேண்டிய தேவை அல்லது அழுத்தம் என்ன? என்று அவரை எதிர்க்கும் கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆதவ் கட்சியில் இணைந்த பிறகு சில மாதங்கள் வரை திமுகவை விமர்சிக்கவில்லை. எம்பி தேர்தலுக்குப் பின்பே அவர் திமுகவிடம் பகையை வளர்க்க தொடங்கினார். அப்படி எனில் திருமா யாருக்காக பொதுத் தொகுதியைக் கேட்டார். அது ஆதவ் அர்ஜுனாவுக்காக இல்லையா? என்பதை விளக்காமல் விட்டது ஏன்? அங்கேதான் ஆதவ் கை விசிகவில் ஓங்கிய இருப்பதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனிடையே தான் விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் அதிகாரத்தில் பங்கு என்றும் ஆட்சியில் பங்கு என்று பேசியதற்குப் பின்னால் ஆதவ் அர்ஜுனாவின் வியூகம் இருக்குமோ என்று இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. அதை வைத்து 2026இல் விசிகவை விஜய் பக்கம் கொண்டுவரலாம் என ஆதவ் ஏன் வியூகம் வகுத்து இருக்க முடியாது என இணைய உலகில் கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்த விவகாரம் பெரியதாக வெடித்த பிறகே தலித் அல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது கட்சியின் உயர்மட்டக் குழு கூடியே முடிவுகளை எடுக்கும் என்று திருமா தெரிவித்திருந்தார். கட்சிக்குள் அப்படி ஒரு விதிமுறை இருக்கிறது என்பதே அப்போதுதான் தெரியவந்தது. அப்படி எனில் அவர் வாரப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்து சர்ச்சை எழுந்த போது ஏன் இந்த விதிமுறையை திருமா அல்லது விசிக வெளிப்படுத்தவில்லை?
இப்போது அம்பேத்கர் நூல் வெளியீடு நிகழ்வு சர்ச்சை பற்றி கொண்டு எரியத் தொடங்கிய பிறகே , "யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்!" என்கிறார் திருமா. அப்படி எனில் கட்சிக்குள் இருந்தே சூது செய்ய ஆதவ் உடந்தையாக இருந்ததா? என்றும் சந்தேகம் வருகிறது.
இந்தச் சர்ச்சை பற்றிப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "ஆதவ் தைரியமாக ஒன்றும் பேசவில்லை. அவர் விசிகவில் சேர்ந்ததே இந்தக் கட்சியை தனது நோக்கத்திற்கு ஏற்ப செயல்பட வைக்கலாம் என்று நம்பித்தான் என நினைக்கிறேன். ஆதவ் பின்னால் பாஜக இருப்பதாக உணரமுடிகிறது. ஆதவ் யார்? தேர்தல் வியூக வகுப்பாளர்தானே? அந்தத் தொழிலைத்தானே செய்து வருகிறார். இன்றைக்கு மன்னர் ஆட்சி என்று புலம்புகிறார். அப்படி எனில் 2019இல் அந்தக் கட்சிக்காகத் தேர்தல் வேலை பார்த்தது ஏன்? பணம் வந்தால் எதை வேண்டுமானாலும் செய்வாரா? உதயநிதிதான் ஸ்டாலினுக்குப் பின்பு வருவார் என்பது தெரியாதா?
ஆதவ் அர்ஜுனா எம்பி அல்லது எம்.எல்.ஏ சீட்டு கிடைக்கும் என எதிர்பார்த்தார். இவருக்கு திமுக ஆட்சியை வீழ்த்துவதற்குப் பல நோக்கங்கள் இருக்கலாம். அதற்கு விசிக உடன்பட வேண்டுமா?. எனவே அவர் விஜய் கட்சிக்கு போக வாய்ப்பு குறைவுதான். அவர் தேர்தல் வியூக வகுப்பாளராகவே செயல்படலாம். விஜய் கட்சி இருக்கு அந்தளவுக்கு ஒத்துவருமா என்பது சந்தேகம்தான்" என்கிறார்.
ஆதவ் அர்ஜுனாவின் நோக்கம் திமுகவை வீழ்த்துவது என்பது. அதில் அவர் உறுதியாக இருக்கும் போது மீண்டும் 6 மாதங்கள் கழித்து அவரால் விசிகவுக்குள் எப்படி இயல்பாகப் பயணிக்க முடியும்? அவர் இந்த 6 மாதக் காலங்களில் திமுகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் வேலையைத்தான் செய்வார். அப்படி இருக்கும் போது ஆதவ் மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பு இல்லை என்பதாகவே பலரது கருத்து இருந்து வருகிறது. விசிகவை சேர்ந்த ரவிக்குமார் எம்பி, சட்டமன்ற உறுப்பினரான ஆளூர் ஷாநவாஸ், சிந்தனை செல்வன், பனையூர் பாபு, எஸ்.எஸ். பாலாஜி எனப் பலரும் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு எதிராகவே உள்ளனர். அதேநேரம் சங்கத் தமிழன் போன்றவர்கள் மீண்டும் ஆதவ் கட்சிக்குள் வருவார் என்பது போலப் பேசி வருகின்றனர்.
அதேநேரம் இயக்குநர் அமீர் போன்றவர்கள் ஆதவ் அர்ஜுனாவை தவெகவுக்குள் இணைப்பது சரியான முடிவாக இருக்காது என்று வெளிப்படையாகக் கூறிவருகின்றன. விஜய்யின் நெருங்கிய வட்டாரமும் அதே கருத்தை முன்வைத்து ஆலோசனை அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆதவ் பற்றிய விசாரணையை விஜய்யும் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போதைக்குப் பந்து விஜய் மைதானத்தில் போய் நிற்கிறது. என்ன நடக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications