ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! கைதான 8 பேரில் ஒருவர் பாஜக பிரமுகரா? யார் அந்த செல்வராஜ்?
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களில் ஒருவர் பாஜக பிரமுகர் என தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. கைதான நபர்களில் அவர் பாஜகவா இல்லையா என்பது குறித்து போலீஸார் விசாரணையில்தான் தெரியவரும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் முன்பாக மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிரார்கள்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த 8 பேரில் பாஜகவின் எஸ்.சி., எஸ்.டி, பிரிவு திருநின்றவூர் மண்டலத் தலைவர் செல்வராஜ் ஒருவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆருத்ரா பண மோசடி வழக்கிற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என கேட்ட போது அவர் கூறுகையில் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
அது குறித்து முழுமையாக எதுவும் சொல்ல முடியாது. கடந்த ஆண்டில் முதல் 6 மாதத்தில் 63 கொலைகள் நடந்துள்ளன. மூன்று மணி நேரத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்தோம். அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என சிலர் சொல்வது குறித்து விசாரணை நடத்துவோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என ரத்தோர் தெரிவித்தார்.
ஆற்காடு சுரேஷ் என்பவர் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் உதவியாக சுரேஷ் ஆதரவாளர்கள் கருதி வந்த நிலையில் அதற்கு பழித் தீர்க்கும் விதமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications