செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைக்குமா? அமலாக்கத்துறை மனு மீது நாளை தீர்ப்பு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மனு மற்றும் இடைக்கால ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனு மீது சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி நாளை உத்தரவு பிறப்பிக்கிறார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அது போல் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவரை கைது செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்போது அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. அதில் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அவரிடம் நேரில் விசாரணை நடத்த சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி வந்திருந்தார். அவர் செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரியும்,அமலாக்கத்துறை சார்பில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று பரபரப்பு வாதங்கள் நடைபெற்றது. அமலாக்கத்துறை காவலில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மனு, இடைக்கால ஜாமீன் கோரிய மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மனு மீது சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி நாளை உத்தரவு பிறப்பிக்கிறார்.












Click it and Unblock the Notifications