Vijay: கரூரை கண்டுகொள்ளாத விஜய்! இறுதிநாள் பிரச்சாரத்தில் காத்திருக்கா சர்ப்ரைஸ்?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கரூர் விஷயத்தில் தன் மீது திமுக பழிபோடுவதாக பேசி வரும் விஜய், தவெக கூட்டத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அடுத்தக் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் செய்வதாக கூறப்படுகிறது.

விஜய்யின் கடைசி நாள் பிரச்சாரம்?
தொடர்ந்து தர்மபுரி செல்வார் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் விஜய்யின் கடைசி நாள் பிரச்சாரத்தை கரூரில் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியினர் சிலர் பேசி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே கரூர் மாவட்ட அரசியல் தொடர்பாக பல்வேறு ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. கரூரில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு மாறியுள்ளார்.
இதனால் கரூரில் மீண்டும் திமுக வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கரூர் தொகுதியில் திமுக சார்பாக தியாகராஜன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். தவெக சார்பாக மாவட்டச் செயலாளர் மதியழகன் களமிறக்கப்பட்டுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிறை சென்றவர் தான் மதியழகன். தவெக நிர்வாகி கூட்டத்தில் விஜய், மதியழகனை கட்டிப்பிடித்து ஆதரவு கொடுத்திருந்தார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்
இருப்பினும் கரூர் மாவட்டத்தில் தவெகவுக்கு செல்வாக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விஜய் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அதேபோல் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் வரவழைத்து சந்தித்தார்.
அப்போதும் கூட நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்று விஜய்யை சந்திக்கவில்லை. இதனால் சட்டசபைத் தேர்தலின் போது விஜய் நிச்சயமாக கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் விஜய் இதுவரை கரூர் பக்கமே செல்லவில்லை. கொங்கு மண்டலத்தில் விஜய் தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவில்லை.
விஜய் செல்வாரா?
கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பலரும் விஜய் மீது எந்த தவறும் கிடையாது என்றும், விஜய் கரூர் வந்து எங்களை சந்திக்க வேண்டும் என்றே கோரிக்கையாக வைத்து வருகின்றனர். இதனால் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் முடிவதற்குள் விஜய் கரூர் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தால், அது தவெக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்.
அதேபோல் விஜய் மீது எதிர்க்கட்சிகள் முன் வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்க முடியும். இதனால் கரூரில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட வேண்டும் என்பதே தவெக வேட்பாளர்களின் குரலாக இருக்கிறது. ஆனால் கரூரில் தற்போதைய சூழலில் திமுக vs அதிமுக vs தவெக என்றுதான் போட்டி இருக்கிறது.
திமுக vs அதிமுக vs தவெக
திமுக சார்பாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் தியாகராஜன் இறங்கியுள்ளார். அதேபோல் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியில் உள்ளார். மறுபக்கம் மதியழகன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மும்முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், விஜய் பிரச்சாரம் செய்தால் அது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications