நீலகிரியில் உறை பனி.. கடலோர மாவட்டங்களில் பெய்யப் போகுது நல்ல மழை.. வானிலை மையம் தந்த ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த இரு நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக். இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தான் நிறைவடைந்தது. தொடக்கத்தில் பெரியளவில் மழை இல்லை என்றாலும் அதன் பிறகு நல்ல மழை கிடைத்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் ஓரளவுக்கு நல்ல அளவில் வடகிழக்கு பருவமழை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜன.5) மற்றும் நாளை (ஜன.6) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும் நாட்கள்
அதேபோல நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும் நாளையும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. 07.01.2023 முதல் 09.01.2023 வரை: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாமல்லபுரத்தில் மட்டும் அதிகபட்சமாக 10 மிமீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
நாளை (ஜன. 6) மற்றும் நாளை மறுநாள் (ஜன.7) தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு / கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உறை பனி
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேநேரம் இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் உறை பனி ஏற்படுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications