மறைக்கப்பட்ட 4362 கோடி எங்கே? ஆர்டிஐ மூலம் அம்பலமான புதிய தகவல்!
பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டமானது சட்ட விரோதமானது என்று கடந்த சில தினங்கள் முன்பாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
ஆகவே, தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த செவ்வாய் மாலை எஸ்பிஐ வங்கி, நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த கால வரம்புக்குள் விற்பனையான பத்திரங்கள் பற்றிய விவரங்களைச் சமர்ப்பித்தது.

அதன்பின்னர் அந்த விவரங்கள் அனைத்தையும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டது.
ஆனாலும், அந்த விவரங்கள் முழுமையாக இல்லை. பத்திரங்களின் சீரியல் எண்களை எஸ்பிஐ வங்கி, நீதிமன்றத்தில் வழங்கவில்லை. ஆகவே, அதையும் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கேட்டிருந்தது.
இதனிடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக நிதியைப் பெற்றுள்ளதாகவும், அமலாக்கத்துறை சோதனைக்குப் பின்னர் பல நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் நிதியை அளித்துள்ளதாகவும் அதைத் தாண்டி புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் நிறுவனம் ஒன்று பாஜகவுக்கு நிதி அளித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான புகார்களை எழுப்பி வருகின்றன.
ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக நிதி பெற்றதற்கும் அமலாக்கத்துறை விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டது ஆர்.டி.ஐ மூலமாக சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தத் தேர்தல் பத்திரங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 2018 ஜனவரி மாதம் முதலே நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. அன்று முதல் தேர்தல் பத்திரங்கள் எஸ்பிஐ வங்கி மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், உச்சநீதிமன்றம் 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15வரையிலான ஆவணங்களைத்தான் ஒப்படைக்கச் சொல்லி இருந்தது. அந்தக் காலகட்டத்திற்குள் எவ்வளவு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? அதை யார் யார் வாங்கி உள்ளனர்? அதில் பணமாக மாற்றப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஆகிய விவரங்களை நீதிமன்றம் கேட்டிருந்தது.
அதை அனைத்தையும் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை எஸ்பிஐ வங்கி ஒப்படைத்தது. அதன்பின்னர் அந்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதில் 2018 இல் விற்பனையான தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை எஸ்பிஐ வழங்கவில்லை. ஏனெனில் நீதிமன்றம் அந்த ஆவணங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்கவும் இல்லை.
உச்சநீதிமன்றம் கேட்காத அந்தத் தேர்தல் பத்திரங்கள் கிட்டத்தட்ட 15 மாதங்கள் விற்பனை செய்யப்பட்டவை. அதில் மொத்தம் 5,813 பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன.

அந்தப் பத்திரங்களை வாங்கியது யார்? அவை எந்தக் கட்சிக்குப் போய்ச் சேர்ந்தன? அதன் மூலம் பணமாக்கப்பட்ட தொகை எவ்வளவு ? இப்படியான விவரங்களைப் பற்றி இப்போது ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.
அதன்படி 4362 கோடி ரூபாய்க்கான பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. அதாவது நீதிமன்றம் தரவுகளைக் கேட்காத காலகட்டத்தில் மட்டும் இந்த மதிப்பிலான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி விற்பனை செய்துள்ளது என்று ஆர்டிஐ தகவல் சொல்கிறது.
அப்படி என்றால், பத்திரங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற அந்த 4362 கோடி ரூபாய்க்கான பணம் யாருக்குச் சென்றது? எந்தக் கட்சி அதைப் பணமாக மாற்றியது? ஏன் அந்தக் காலகட்டத்திற்கான விவரங்கள் நீதிமன்ற கணக்கிற்குள் வரவில்லை?

தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்த 2018 ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரை 28,030 பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்சிகளுக்குச் சென்றுள்ள நிதியானது ரூ.16.518 கோடி. அதனுடன் இந்த விடுபட்டுள்ள 4362 கோடியைச் சேர்த்தால் மொத்தம் ரூ.20,880 கோடி வருகிறது.
ஆக, நீதிமன்றம் உத்தரவு மூலம் கிடைக்கப்பெறாத கூடுதல் தகவல்கள் இப்போது ஆர்டிஐ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எனவே இது குறித்து மீண்டும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நீதிமன்றத்திற்கு இந்தத் தகவல்கள் கொண்டு செல்லப்படும் போது, பல உண்மைகள் வெளியாகும். அந்தப் பணம் எந்தக் கட்சிக்குச் சென்றது? அந்தக் காலகட்டத்தில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைகள் என்ன? அந்தச் சோதனைக்குப் பின்னர் கொடுக்கப்பட்ட நிதி எவ்வளவு என புதிய பூதம் கிளம்பும்.
அப்படிக் கிளம்பினால், அது ஆளும் கட்சிக்கு மேலும் சிக்கலாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications