அடேங்கப்பா.. 115 அடி ஆழத்தில் அமையும் மெட்ரோ நிலையம்.. சென்னையிலேயே இதுதான் ஆழம்.! எங்கு தெரியுமா
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானம் படுவேகமாக நடந்து வருகிறது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோவில் ஆழத்தில் அமையும் மெட்ரோ நிலையம் எது என்று தெரியுமா.. வாங்க பார்க்கலாம்.
சென்னை மெட்ரோ ஏற்கனவே இப்போது இரண்டு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே ஆதரவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு மாதமும் இதில் பயணிப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
சென்னையில் இப்போது நீலம் மற்றும் பச்சை என்று இரு வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட், சென்டிரல் முதல் பரங்கி மலை வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.

மெட்ரோ: இது தவிர மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் வழித்தடங்களிலும் மெட்ரோ அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்த மெட்ரோ கட்டுமானங்கள் நுழுமையாக முடிந்தால் சென்னை விரிவான மெட்ரோ அமைப்பைக் கொண்ட நகராக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்போது பேருந்துகள், மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள், மெட்ரோ எனப் பல வகை பொது போக்குவரத்தைக் கொண்ட ஒரு நகரமாகச் சென்னை இருக்கும்.
இந்த இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்தில் மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையம் எது என்று தெரியுமா.. கட்டுமானத்தில் இதுதான் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், கடைசியாகத் தயாராகும் மெட்ரோ நிலையமாகவும் இதுவே இருக்கும்.
எந்த மெட்ரோ நிலையம்: பூமிக்கு அடியில் 115 அடி ஆழத்தில் இந்த மெட்ரோ நிலையம் அமைகிறது. ஒரு கான்கோர்ஸ் மற்றும் மூன்று பிளாட்பாரங்கள் என்று நான்கு நிலைகளில் இந்த மெட்ரோ நிலையம் அமைய உள்ளது. இவ்வளவு ஆழத்தில் அமைவது எந்த மெட்ரோ நிலையம் எனக் கேட்கிறீர்களா.. அதுதான் திருமயிலை மெட்ரோ நிலையம். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் கடைசியாக ரெடியாகும் மெட்ரோ நிலையமாக இந்த திருமயிலை மெட்ரோ நிலையம் இருக்கும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ படிப்படியாகத் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திருமயிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள வழித்தடங்கள் கடைசியில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. அதாவது பனகல் பார்க் முதல் திருமயிலை, திருமயிலை முதல் லைட் ஹவுஸ், ஆயிரம் விளக்கு முதல் திருமயிலை மற்றும் கிரீன்வேஸ் ரோடு முதல் திருமயிலை ஆகிய வழித்தடங்கள் கடைசிக் கட்டத்தில் 2028இல் பயன்பாட்டுக்கு வரும் என்றே தெரிகிறது.
திருமயிலை மெட்ரோ நிலையம் கட்டுவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் தான் விடப்பட்டது. 115 அடி ஆழத்தில் உருவாகும் இந்த மெட்ரோ நிலையம் ரெடியாக 5 ஆண்டுகள் ஆகிவிடும். அதன் பின்னரே, மெட்ரோ ஸ்டேஷனும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் மெட்ரோ சேவையை ஆரம்பிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்ன காரணம்: இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், "இங்கே சாலையே மிகவும் குறுகியதாக இருக்கிறது. மேலும் நிலத்தின் தன்மையும் கடினமாக இருப்பதால் இந்த மெட்ரோ நிலையத்தை அமைப்பது சவாலாக இருக்கும். மெட்ரோ விரிவாக்கத்தில் இப்போது அனைத்து புதிய வழித்தடங்களிலும் கட்டுமானம் தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும், மேம்பாலத்தில் அமையும் மெட்ரோ 2025 முதல் படிப்படியாக மக்கள் சேவைக்கு வரும்.
அதைத் தொடர்ந்து சுரங்கத்தில் அமையும் மெட்ரோ பயன்பாட்டிற்கு வரும். 2027இல் பணிகள் முழுமையாக நிறைவடையும். இந்த குறிப்பிட்ட திருமயிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பணிகள் 2028இல் தான் நிறைவடையும்" என்றார்.

ஏன் முக்கியம்: சென்னை மெட்ரோவில் திருமயிலை மெட்ரோ நிலையம் முக்கியமான ஸ்டேஷன்களில் ஒன்றாக இருக்கும். 4,854.4 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் இந்த மெட்ரோ நிலையம், பறக்கும் ரயில், மாநகர பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ நிலையங்களில் இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திருமயிலை மெட்ரோ நிலையத்தில் மட்டும் ஐந்து நுழைவாயில்கள் இருக்கும்.
ஏனென்றால் மாதவரம் முதல் சிப்காட் வரை செல்லும் 3ஆவது வழித்தடம் மற்றும் லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை செல்லும் 4ஆவது வழித்தடம் என இரண்டையும் இந்த திருமயிலை நிலையம் இணைக்கிறது. மாதவரம் முதல் சிப்காட் வழித்தடத்தில் இங்கும் ரயில்கள் நிலத்திற்கு அடியில் 17 மீட்டர் மற்றும் 35 மீட்டர் ஆழத்தில் இரண்டு டிராக்குகளில் இயக்கப்படும். அதேபோல கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை இயக்கப்படும் ரயில்கள் இந்த இரண்டிற்கும் நடுவில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications