Exclusive விஜய்க்கு எதிரி ஸ்டாலின் தான்.. சீமான் மொத்தமா காலி! வேற லெவல் பிளான்! அலசும் பழ.கருப்பையா
சென்னை: விஜய்யின் அரசியல் பிரவேசம் பல கட்சிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. விஜய் இன்னும் வெளிப்படையாக எந்தக் கட்சியையும் தாக்கிப் பேசவில்லை என்றாலும் 2026 சட்டமன்றத் தேர்தல் தனது குறி என்பதை தெரிவித்துவிட்டார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் கட்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பு என அலசுகிறார் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ.கருப்பையா.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகிறது. கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய விஜய், மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். விஜய் அரசியல் களத்தில் இறங்கி இருப்பது பல கட்சிகளுக்கு சிக்கலாக மாறும் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ.கருப்பையா நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தொடங்கி, ஜனதா கட்சி, ஜனதா தளம், திமுக, மதிமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகளில் பணியாற்றியவர். நீண்ட காலமாக அரசியலில் இயங்கி வரும் பழ.கருப்பையா, தற்போது தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தை நிர்வகித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி இங்கே..
கேள்வி: விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி பாடலை வெளியிட்டுள்ளார். அதை எப்படி பார்க்கிறீர்கள்? விஜய் யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது? விஜய் எந்தக் கட்சிக்கு எதிராகப் பேசுவார்?
பழ.கருப்பையா: சினிமா போலவே ஒவ்வொரு கட்டமாக சஸ்பென்ஸோடு வருகிறார் விஜய். முதலில் லேசாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வருகிறார். மாநாட்டில் முழுமையாக இறங்கப் போகிறார்.
விஜய் கட்சி கொடி ஏற்றப்போகிறார் என்ற செய்தி 2 நாட்களுக்கு மேலாக பரபரப்பில் இருந்ததால், விஜய் கொடி ஏற்ற வந்த நேரம் பார்த்து வேண்டுமென்றே திட்டமிட்டு, தமிழக அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்தி பரப்பப்பட்டது. அமைச்சர்கள் சிலர் மாற்றப்படுவதாக செய்தியை பரப்பி விஜய்யின் கொடியேற்ற நிகழ்ச்சியை மங்கச் செய்வது திமுகவின் திட்டம். ஆனால், விஜய் கொடியேற்ற நிகழ்ச்சியின் பரபரப்புக்கு முன்னால் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் மறைந்துவிட்டன.
ஸ்டாலின் தான் எதிரி: விஜய்க்கு மிகப்பெரிய ஃபாலோயர்கள் கூட்டம் இருக்கிறது. திமுகவின் பொழுது மங்கி வருகிறது. அது விரைவில் இருட்டிவிடும். நேரடியாக ஸ்டாலினை எதிர்த்து வீழ்த்தும் நோக்கத்தோடு தான் வருகிறார் விஜய். எதிரி என்றான பிறகு மொத்தென்று தலையில் குட்டக்கூடாது, நங்கென்று குட்ட வேண்டும். விரைவில் நடைபெற உள்ள மாநாட்டில் பெரும் கூட்டத்தை திரட்டிக் காட்ட இருக்கிறார்.
சீமான் காலி: விஜய்யுடன் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். விஜய் முழுமையாக அரசியலுக்கு வந்ததும் சீமான் காலியாகிவிடுவார். சீமானோடு கூட்டணி வைத்தால் விஜய் காலியாகி விடுவார். 600 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் சுமார் 1 கோடி பேரை தமிழர்கள் இல்லை என்கிறார் சீமான். தமிழில் பேசி, தமிழில் சிந்திக்கும் மக்களை தமிழர்கள் இல்லை என்று கூறி வெறுப்பை உருவாக்கி வைத்தால் அவர்களின் ஓட்டு எப்படி சீமானுக்கு கிடைக்கும்? எனவே சீமானோடு சேர்ந்தால் விஜய் காலியாகிவிடுவார்.
அரசியலுக்குள் நுழையும்போதே சில்வர் ஸ்பூனோடு நுழைந்திருக்கிறார் விஜய். ஏன் என்று கேட்காமல் பின்பற்றுவோர் கூட்டத்தைப் பெற்றிருக்கும் விஜய், சரியான கருத்துகளை மட்டும் வைக்கத் தெரிந்துவிட்டால் இவர் அடையப்போகிற உச்ச இடத்தை வேறு யாராலும் எட்ட முடியாது. ஆனால், சரியான கருத்துகளை வைக்க முடியாவிட்டால் எம்.ஜி.ஆர் இடத்தை பெற முடியாது.
மொத்தமாக வாக்குகளை உறிஞ்சிவிடுவார்: விஜய்யின் எதிரி திமுகவாக இருந்தால் தான் அவரது அரசியலில் அர்த்தம் இருக்கிறது. பாஜகவுடனோ, சீமான் உடனோ விஜய் சேர்ந்தால் மொத்தமாகப் போய்விடும். சீமான் கட்சி வாக்குகளை ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிடுவார் விஜய். விஜய் வருகையின் மூலம் முதலில் அவுட் ஆகப் போவது சீமான் தான்.
திமுக ஆளும் லட்சணத்திற்கு, இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு மாற்றுக் குதிரை எது வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இப்போதுதான் விஜய்யின் கை ஓங்கி நிற்கும்.
எம்ஜிஆரும் இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் தனது அரசியல் நகர்வுகளை சிறப்பாக செய்து தமிழகத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்தவர். அதுபோல விஜய்க்கு எப்படிப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும் அதை தவிடு பொடியாக்கி மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.












Click it and Unblock the Notifications