நீங்க யார்.. ஏன் இங்க நிற்கிறீங்க? பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு விட்ட அமைச்சர் மூர்த்தி!
சென்னை: சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் மூர்த்தி, அங்கு தேவையின்றி நின்று கொண்டிருந்த இடைத்தரகர்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.
நீங்க யார்.. ஏன் இங்க நிற்கிறீங்க?டோக்கன் எங்கே என அமைச்சர் மூர்த்தி டென்ஷன் ஆன நிலையில், தனது பெயர் சீனிவாசன் என்றும் தாம் சாட்சிக் கையெழுத்து போட வந்த நபர் எனவும் 2 டூ 3 டோக்கன் போட்டுள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் மூர்த்தியிடம் அந்த நபர் தெனாவட்டாக பேசியதை பார்த்த பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள், சீனிவாசன் என்ற பெயர் டோக்கன் லிஸ்டில் உள்ளதா என ஆராயத் தொடங்கினர். வம்பை விலை கொடுத்து வாங்கிய கதையாக அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக இன்னும் ஏதோதோ கூறிக்கொண்டிருந்தார்.
அமைச்சர் மூர்த்தியின் அதிரடி ஆக்ஷன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுற்றித் திரிந்த இடைத்தரகர்களுக்கு ஹைவோல்ட் ஷாக்காக அமைந்திருந்தது. அமைச்சருடன் பத்திரப்பதிவு துறை ஐஜி உட்பட இன்னும் பல உயர் அதிகாரிகள் இந்த ஆய்வில் இருந்தனர்.
சென்னையை போலவே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அமைச்சர் மூர்த்தி சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. காரணம் சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் கடை நிலை ஊழியர்களும், இடைத்தரகர்களும் சிண்டிகேட் அமைத்து கலெக்ஷன் பார்ப்பது இங்கு அங்கு என்றில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
உயர் அதிகாரிகள் கேட்கிறார்களோ இல்லையே அவர்களது பெயரைச் சொல்லி சொத்து விற்க வருபவர்களிடமும், வாங்க வருபவர்களிடமும் கல்லா கட்டும் ஆசாமிகள் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பார்க்க முடியும். இது போன்ற நபர்களை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு அமைச்சர் மூர்த்திக்கு உள்ளது.












Click it and Unblock the Notifications