"ஸ்டெர்லைட்" நிலம் கொடுத்தது யார்? மாஞ்சோலை சம்பவத்திற்கு யார் பொறுப்பு? திமுகவை வெளுத்த எடப்பாடி
சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்ததே திமுக தான் என்றும், மாஞ்சோலை தொட்ட தொழிலாளர்கள் 17 பேர் சாவுக்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளது. தேர்தலுக்கு ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்கிறது. அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்..

தமிழக தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. பிற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் பிரசாரம் செய்தார். கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து எடப்பாடி பேசியதாவது;-
சிலபேர் பேசுகிறார்.. கட்சிக்கு வந்து 5 ஆண்டு கூட ஆகல. அவர் அதிமுகவை அழித்துவிடுவேன் என்று சொல்கிறார். உங்களை போல எத்தனையோ பேரை பார்த்த கட்சி தான் அதிமுக. ஆக அதிமுகவை அழிக்க இந்த பூமியில் எவரும் பிறந்ததில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பொன்விழா கண்ட கட்சி. 2 கோடியே 6 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்ற கட்சி. எங்கள் கட்சியையா அழிக்க நினைக்கிறீர்கள். அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனதாக சரித்திரம்.
அதிமுக இருக்கின்ற காரணத்தால் தான் ஏழை மக்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். மக்களுக்காக இருக்கின்ற கட்சி தான் அதிமுக. மக்கள் மனதில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்கள் மனதில் இன்னும் தெய்வமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் ஆதரவு கொண்ட கட்சி அதிமுக.
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு 86 ஏக்கர் நிலம் கொடுத்தது அமைச்சராக இருந்த ஸ்டாலின் தான். அப்போது தொழில் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் தான் ஸ்டெர்லை ஆலை திறப்பதற்கு காரணம். 1500 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என்று சொன்னது ஸ்டாலின் தான். அதிமுக ஆட்சியின் போது அந்த ஆலையை மூடுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.
காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புதுப்பிக்க கோரி ஆணை வந்தபிறகும் அதனை புதுப்பிக்காமல் நிறுத்தி வைத்து இருந்தது அதிமுக அரசு. சம்பவம் நடக்கும் முந்தைய நாள் கூட தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. ஆனால் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் தடையை மீறி கூட்டத்தை திரட்டி ஊர்வலம் நடத்தி கலவரம் செய்ய தூண்டி விட்டீர்கள்..
அப்பாவி மக்களை தூண்டி விட்டு, இப்படி விரும்பத்தகாத சம்பவத்தை உருவாக்கியவர் நீங்கள்.. இதேபோல், விவசாயிகள் மின் கட்டணத்தில் ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில், சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் போராடிய விவசாயிகளை குருவி சுடுவது போல சுட்டு வீழ்த்தியது திமுக அரசு.
இதேபோல் கோவை என மொத்தம் 14 விவசாயிகளை ஒரு பைசா மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி போராடியபோது திமுக அரசு சுட்டு வீழ்த்தியுள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இடையில் வழிமறித்து போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர்.
கடுமையாக தாக்கியதன் காரணமாக உயிருக்கு பயந்து 17 பேர் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்கள் 17 பேரின் இறப்புக்கு யார் காரணம் யார் பொறுப்பு?.. இந்த திராவிட அரசு தான் காரணம். ஊதிய உயர்வு கேட்டவர்களை கடுமையாக தாக்கியதால் தான் உயிருக்கு பயந்து இப்படி இறந்துவிட்டனர்.
இது மட்டுமில்லை திமுக ஆட்சியில் ஏராளமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. தேர்தல் நேரத்தில் அவதூறு பரப்பினால், அரசியல் ஆதாயத்திற்காக இப்படி சொன்னீர்கள் என்றால் இதற்கு தகுந்த பதிலடியை அதிமுக கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications