ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே?
டெல்லி: சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் ஆப்ஜித் தீப்கே யார் என்ற கேள்வி தற்போது பலரிடமும் எழுந்துள்ளது. 30 வயதான ஆப்ஜித் தீப்கே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். புனேவில் பத்திரிகையியல் (Journalism) துறையில் இளங்கலைப் பட்டம் முடித்து பின்னர் அமெரிக்காவில் முதுகலை முடித்த அவர், ஆம் ஆத்மி கட்சியிலும் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொது தொடர்பியல் பிரிவில் இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டப்படிப்பை அண்மையில் முடித்தார். சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடிய ஆப்ஜித் தீப்கே அரசியலிலும் ஆர்வம் கொண்டுள்ளார். கடந்த 2020 முதல் 2023 வரை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியுள்ளார்.

தேர்தல் பிரசார திட்டமிடல்
அந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தள மேலாண்மை, தேர்தல் பிரசார திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பிரச்சார பணிகளில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் அமெரிக்கா சென்ற அவர், தற்போது மீண்டும் இந்திய அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆபிஜித் தீப்கேவின் பெற்றோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு மகாராஷ்டிர தொழில் வளர்ச்சி கழகத்தில் (MIDC) பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற பகவான்ராவ் தீப்கே (தந்தை), குடும்பத்துடன் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
ஆப்ஜித் தீப்கேயின் இந்த புதிய முயற்சிகள் அவரது குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அவரது தந்தை பகவான்ராவ் தீப்கே கூறுகையில், "ஒரு தந்தையாக எனக்குள்ள அச்சம் இயல்பானதுதான். ஆரம்பத்தில் அவர் இந்த இயக்கத்தை தொடங்கும் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். ஆனால் ஒருவர் ஒரு விஷயத்தில் உறுதியாக முடிவு செய்துவிட்டால், அதற்கு மேல் நாம் சொல்ல எதுவும் இருக்காது. இனிமேல் அவருக்கு நாங்கள் எந்த ஆலோசனையும் வழங்கப் போவதில்லை" என்றனர்.
மனிஷ் சிசோடியாவுடன் புகைப்படம்
மேலும், பெற்றோர்களாக எங்களுக்கு கவலை இருக்கிறது. ஆனால் ஆப்ஜித்துக்கு சட்டம் குறித்து நல்ல புரிதல் உள்ளது. எந்த சட்டத்தையும் மீறாமல் செயல்படுவேன் என்று அவர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்" என்றும் அவரது தந்தை கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் நையாண்டியாக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம், தற்போது நாடு முழுவதும் பேசப்படும் அரசியல் இயக்கமாக மாறியுள்ள நிலையில், ஆப்ஜித் தீப்கேவை பற்றிய விவரங்களை பலரும் ஆர்வத்துடன் தேடி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாமல், டெல்லி அரசிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். தீப்கே, 2019 அக்டோபர் முதல் 2021 ஏப்ரல் வரை டெல்லி முதல்வர் அலுவலகத்தில் தகவல் தொடர்பு பிரிவில் (Communications Fellow) பணியாற்றியுள்ளார். பின்னர், 2021 ஜூன் முதல் 2024 மே வரை டெல்லி கல்வித்துறையின் தகவல் தொடர்பு ஆலோசகராக செயல்பட்டார். டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுடன் அவர் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications