ரீல் ஹீரோவும்; ரியல் ஹீரோவும்; சூர்யாவை சீண்டுகிறார் அன்புமணி?; விஷயம் என்ன?
சென்னை: சென்னை அண்ணாநகர் காவல் ஆய்வாளரை பாராட்டி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு வரி தான் இப்போது பேசு பொருளாக உள்ளது.
சினிமாவில் பலர் ரீல் ஹீரோ என்றும் களத்தில் அண்ணாநகர் காவல் ஆய்வாளரை போன்ற நபர்கள் தான் ரியல் ஹீரோ எனவும் அன்புமணி பயன்படுத்தியுள்ள இந்த சொல்லாடல் நடிகர் சூர்யாவை சாடித்தான் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யா இடையே ஏற்கனவே கருத்துமோதல் இருந்து வரும் சூழலில் அது வார்த்தைப்போராக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஜெய்பீம் திரைப்படம்
இருளர் இன மக்களின் துயரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இப்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ஜெய்பீம் திரைப்படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. வன்னியர் சமுதாய மக்களை ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் தவறாக சித்தரித்துக் காட்டியுள்ளதாக கூறி வன்னியர் சமுதாய அமைப்புகள் எதிர்க்குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த திரைப்படம் தொடர்பாக 9 கேள்விகளை முன் வைத்து நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார் அன்புமணி.

சுடச்சுட பதில்
அந்தக் கடிதத்துக்கு சற்றும் தாமதமின்றி சுடச்சுட உடனடியாக பதிலளித்த நடிகர் சூர்யா, அதிகாரத்தை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வியை குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என அன்புமணியை கேட்டுக்கொண்டார். சக மனிதர்களின் வாழ்வு மேம்படுவதற்கான பங்களிப்பை தன்னால் முடிந்த வரை செய்வேன் எனவும் நடிகர் சூர்யா திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதன் மூலம் எத்தனை பேர் எதிர்க்குரல் கொடுத்தாலும் அதற்கு தாம் அசரப்போவதில்லை என்பதை அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா சூசகமாக தெரிவித்திருந்தார்.

சூர்யாவை சீண்டி
இந்நிலையில் மயக்கமுற்ற இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியை பாராட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சினிமாவில் பலர் ரியல் ஹீரோ என்ற வார்த்தையை குறிப்பிட்டு நடிகர் சூர்யாவை சீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு நடிகர் சூர்யா தரப்பு என்ன எதிர்வினையாற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

நடிகர் ரஜினி
நடிகர் ரஜினிகாந்துடன் ஒரு காலத்தில் பாமக எதிரும் புதிருமாக செயல்பட்டதும் காலப்போக்கில் அவரை நண்பராக ஏற்றுக்கொண்டதும் தமிழக அரசியல் வரலாறு. இதேபோல் இன்று அன்புமணி ராமதாசுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையேயான வார்த்தைப்போர் கால ஓட்டத்தில் கானல் நீராகக் கூட போகலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications