"யூ-டர்ன்".. பாஜக டூ ரஜினி டூ பாஜக.. நம்பிக்கையாக போய் ஏமாந்து திரும்பிய அர்ஜுன மூர்த்தி! யார் இவர்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதில் முக்கிய புள்ளியாக இருப்பார்.. ஏன் ரஜினியின் அரசியல் வாரிசே இவராகத்தான் இருப்பார் என்று கருதப்பட்டவர்தான் அர்ஜுன மூர்த்தி. அப்படிப்பட்ட அர்ஜுன மூர்த்தி தற்போது மீண்டும் பாஜகவிற்கே திரும்பி வந்துள்ளார். ஆசை ஆசையாக ரஜினி கேம்பிற்கு போனவர் மீண்டும் "திரும்பி பாஜகவிற்கே போயிடு சிவாஜி" என்று சொல்லும் அளவில் உடைந்து போய் பாஜகவில் இணைந்து உள்ளார். யார் இந்த அர்ஜுன மூர்த்தி?
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் தான் "நுழையாத" அரசியலில் இருந்து விலகிய போது.. என்னை நம்பி இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை நம்பி என் பின்னால் வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று குறிப்பிட்டார்.
ரஜினி நேரடியாக இப்படி மன்னிப்பு கேட்டவர்களில் ஒருவர்தான் அர்ஜுன மூர்த்தி. பாஜகவில் இருந்து அப்படியே திடீரென ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைந்து பின்னர் ரஜினி அரசியல் தொடங்கவில்லை என்றதும் தனி கட்சி தொடங்கி பின்னர் மீண்டும் அர்ஜுன மூர்த்தி பாஜகவிற்கே திரும்பி உள்ளார்.
அரசியல் ஒரு வட்டம் என்பதை வட்டம் போட்டு காட்டி இருக்கிறார் அர்ஜுன மூர்த்தி!

யார் இவர்?
இவர்தான் அர்ஜுன மூர்த்தி.. இவர் என் சொத்து என்று ரஜினிகாந்த் முதல் கூட்டத்திலேயே இவரை அறிமுகப்படுத்தினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளாராக இவரை ரஜினிகாந்த் நியமனம் செய்தார். சிரித்த முகத்தோடு இருக்கும் இவர்.. அப்போது பாஜக உறுப்பினராக இருந்தார். பாஜகவின் அறிவுசார் அணியின் தலைவராக இருந்தார். என்னது ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கும் போதே இன்னொரு கட்சியில் ஒருங்கிணைப்பாளரா? என்ற சர்ச்சை எழுந்தது. உடனே பாஜக ஒரு அறிக்கையை வெளியிட்டது.

பாஜக அறிக்கை
அதில், அர்ஜுன மூர்த்தி பாஜகவின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ளப்படுகிறார். அவருடன் பாஜகவினர் யாரும் தொடர்பில் இருக்க கூடாது என்று அந்த பாஜக அறிக்கையில் கூறப்பட்டது. நெருக்கமான ஆர்எஸ்எஸ் தொடர்பு கொண்ட இவர் அத்தனை நாட்கள் பாஜகவில்தான் இருந்தார். பாஜகவின் கட்சி கூட்டங்கள், பாஜகவிற்கு கட்சி ரீதியாக ஆலோசனை, ஆன்லைன் கூட்டங்கள், வியாபாரிகள் சங்கங்கள் - பாஜக இடையே நட்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.

காரைக்குடி
முக்கியமாக பாஜக மற்றும் காரைக்குடியில் வியாபாரம் செய்யும் செட்டியார் பிரிவினர், தெலுங்கு பிரிவினர் இடையே உறவை ஏற்படுத்த இவர் தீவிரமான பணிகளை செய்து வந்தார். செட்டியார்கள் பற்றி ஒரு இ புத்தகம் வெளியிட கூட இவர் காரணமாக இருந்தார். முக்கியமாக எல் முருகன் அப்போது தலைவர் ஆனது அர்ஜுன மூர்த்தியின் செயல்பாடு கவனம் பெற்றது. பாஜக நடத்திய வேல் யாத்திரையில் இவர் முக்கிய பங்கு வகித்தார்;

பாஜக கூட்டம்
2020 டிசம்பர் 4ம் தேதி இவர் ரஜினியுடன் இணைந்தார். டிசம்பர் 3ம் தேதிதான் பாஜகவை தமிழ்நாட்டில் வலுப்படுத்துவது தொடர்பாக கட்சி கூட்டம் ஒன்றில் 1 மணி நேரம் பேசினார். இவர் அப்போது ரஜினியுடன் இணைந்ததே பாஜகவின் பிளான். பாஜக போட்டுக்கொடுத்த ஆலோசனை என்றுதான் கூறப்பட்டது. ரஜினிக்கு பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் "அரசியல் ஆலோசகர்" ஒருவர்தான் அர்ஜுன மூர்த்தியை பரிந்துரை செய்ததாகவும் கூறப்பட்டது.

திமுக
அதோடு இவருக்கும் தயாநிதி மாறன் குடும்பத்திற்கு நெருக்கம், இவர் முரசொலி மாறனுக்கு ஆலோசகராக இருந்தார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் அதை அப்போதே தயாநிதி மாறன் மறுத்து இருந்தார். இந்த செய்தி பொய்யானது என்றும் பின்னர் நிரூபிக்கப்பட்டது. அர்ஜுன மூர்த்தி புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டனர். அங்கு உள்ள முக்கியமான சமூகம் ஒன்றை சேர்ந்தவர். இவரின் அப்பா ராமசாமி பிசினஸ்மேன். ஜனதா ரோட்வேஸ் என்ற லாரி நிறுவனத்தை நடத்தி வந்தார்.

குடும்பம்
அர்ஜுன மூர்த்தியின் குடும்பம் பணக்கார குடும்பம். இவரின் மக்கள் லட்சுமி தீபா Yeldi Softcom Private Limited, என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அதேபோல் இவருக்கு சொந்தமாக வேறு சில நிறுவனங்களும் உள்ளன. ரஜினிகாந்தின் சமூக வலைதள பக்கங்களை அப்போது சில காலம் இவர் நிர்வகித்து வந்ததாக கூறப்பட்டது. ரஜினியுடன் இணைந்து இவர் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்.

விலகினார்
இதனால் சில காலம் அர்ஜுன மூர்த்தி அமைதியாக இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலையொட்டி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்று அமைப்பை இவர் தொடங்கினார். ரஜினி ரசிகர்கள் தனது ஆதரவு தருவார்கள் என்று நம்பி இவர் தொடங்கிய கட்சி வளர்ச்சி அடையாமல் அப்படியே இருந்தது. சில காலம் மீண்டும் அமைதியாக இருந்த அர்ஜுன மூர்த்தி தற்போது பாஜகவிலேயே ஐக்கியம் ஆகி உள்ளார். இவர் இருந்த அறிவுசார் அணியின் தலைவர் பதவி ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டதால் இவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications