தேமுதிகவுக்கு உறுதியான ராஜ்யசபா சீட்.. அதிமுக கூட்டணியில் வேட்பாளர் யார்? பிரேமலதா விளக்கம்
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அதோடு வேட்பாளர் யார்? என்பது பற்றிய கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தேமுதிகவின் கட்சி கொடி கடந்த 2000ம் ஆண்டில் விஜயகாந்த் ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார். இந்நிலையில் தேமுதிக கட்சியின் வெள்ளி விழா 25ம் ஆண்டு கொடி நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் நடந்த விழாவில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா சீட்டுக்கான தேர்தல், அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் பற்றியும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டது. விஜய் கட்சி தொடங்கி உள்ளதால் தவெகவுடன் கூட்டணியா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
அதிமுக உடன் கூட்டணி அமைந்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. ராஜ்யசபா தேர்தல் வரும்போது வேட்பாளரை அறிவிப்போம். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம்'' என்று கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டது. அதேபோல் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உள்பட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள மதிமுகவின் வைகோ, திமுகவின் அப்துல்லா, வில்சன், சண்முகம், அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
இந்த 6 இடங்களுக்கு ஜுலை மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. இதில் ஒரு சீட் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் வேட்பாளர் யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு என்பது ஏற்பட்டுள்ளது. அநேகமாக தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் அல்லது அவரது மகன் விஜயபிரபாகரன் அல்லது தம்பி சுதீஷ் ஆகியோரில் ஒருவர் அதிமுக எம்எல்ஏக்களின் உதவியுடன் ராஜ்யசபா எம்பியாகலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications