சீமானிடம் கேட்கப்படும் 53 கேள்விகள் என்ன? அவரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் யார்? வெளியான தகவல்
சென்னை: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சீமானிடம் இப்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சீமானிடம் இப்போது விசாரணை நடத்தும் காவல் அதிகாரிகள் யார்.. அவரிடம் என்ன மாதிரியான கேள்விகளை எழுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை அளித்து பாலியல் புகாரில் சீமானிடம் இப்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவு 7.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராக சீமான் புறப்பட்டார்.. இருப்பினும், இரவு 9.15 மணிக்கு போலீசார் வரச் சொன்னதால் அவர் காத்திருக்க வேண்டி இருந்தது.

சீமானிடம் விசாரணை
அதன் பிறகு போலீஸ் நிலையத்திற்குச் சென்ற போது அங்கு திடீரென போலீசாருக்கும் நாதகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இப்படி பெரும் தள்ளு முள்ளுக்கு பிறகே போலீஸ் நிலையத்திற்குச் சீமான் சென்றடைந்தார். முதலில் அவருடன் மனைவி கயல்விழியும் உடன் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கடைசியில் அவர் வரவில்லை. சீமான் மட்டுமே விசாரணைக்காக போலீஸ் நிலையம் வந்தார்.
விசாரணை நடத்துவோர் யார்
இதற்கிடையே இப்போது வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தின் ஆய்வாளர் அறையில் வைத்து சீமானிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோயம்பேடு காவல் உதவி ஆணையர் அதிவீர பாண்டியன் மற்றும் வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு ஆகியோர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அன்புக்கரசுவும் விசாரணை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 53 கேள்விகள்
சீமானிடம் மொத்தம் 53 கேள்விகளைக் கேட்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த 53 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாகப் பதிலைப் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது நடிகை வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அதன் அடிப்படையிலேயே இந்த கேள்விகளை போலீசார் உருவாக்கியுள்ளனர்.
இந்த 53 கேள்விகளுக்கும் சீமான் அளிக்கும் பதில்களை பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தார். இதுபோல எழுத்துப்பூர்வமாகப் பதில் பெறவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், சீமான் இந்த கேள்விகளுக்கு அளிக்கும் பதிலை பொறுத்துக் குறுக்கு விசாரணையையும் போலீசார் நடத்தலாம் என தெரிகிறது.
போலீஸ் விசாரணை
இது தவிர சீமானை முதலில் நேற்று ஆஜராக போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. அதேபோல இன்றும் காலை 11 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தி இருந்தனர். காலையும் அவர் ஆஜராகவில்லை. எனவே, இது குறித்தும் போலீசார் கேள்விகளை எழுப்ப உள்ளனர். போலீசார் சொன்ன நேரத்தில் ஆஜராக முடியாமல் போனது ஏன் என்பது குறித்து கேள்விகளை எழுப்ப உள்ளனர்.
மேலும், நேற்றைய தினம் சம்மன் ஒட்டப்பட்ட போது சீமான் தரப்பிற்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. சீமான் காவலாளி அமல்ராஜ் அப்போது போலீசாரிடம் துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சீமான் காவலாளி மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். அது தொடர்பாகவும் போலீசார் கேள்விகளைக் கேட்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது இல்லத்தில் நடந்த விஷயம் குறித்து சீமானுக்கு தெரியுமா என்பது போலக் கேள்விகளைக் கேட்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications