தக் லைஃப் வழக்கு.. கமல்ஹாசனை சரமாரியாக கேள்வி கேட்ட கர்நாடக உயர் நீதிபதி நாகபிரசன்னா! யார் தெரியுமா?
சென்னை: தக் லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் கர்நாடக உயர் நீதிபதி நாகபிரசன்னா கமல்ஹாசன் தரப்பிடம் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். பல முக்கியமான வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்,
கர்நாடக உயர் நீதிபதி நாகபிரசன்னா கமல்ஹாசன் தரப்பிடம் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,

நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்
யாராக இருந்தாலும், கமல்ஹாசனாக இருந்தாலும் கூட, நீங்க கமலா இருங்க.. யாரா வேணா இருங்க... மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் பெரிய நடிகராக இருந்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது.
இந்த நாட்டின் பிரிவினை மொழிவாரி அடிப்படையில்தான் நடந்தது. ஒரு பொது நபர் இதுபோன்ற அறிக்கையை வெளியிட முடியாது. இதன் காரணமாக அமைதியின்மை, நல்லிணக்கமின்மை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு கேட்க மட்டுமே சொன்னார்கள். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்காமல் இங்கு பாதுகாப்பு தேடி வருகிறீர்கள். நீங்கள் என்ன அடிப்படையில் அப்படி பேசினீர்கள், நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியரா, மொழியியல் நிபுணரா? என்ன அடிப்படையில் பேசினீர்கள்?
ஸ்ரீ ராஜகோபால் இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டது பொதுவெளியில் உள்ளது. அப்போதே அதற்காக அவரால் மன்னிப்பு கடிதம் எழுதப்பட்டது, 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதேபோன்ற பேச்சு உங்களால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அன்று ராஜகோபால் மன்னிப்பு கேட்டார். இப்போது உங்கள் திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு தேடுகிறீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும். மணிரத்னம் படம் என்பதால் படத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் மன்னிப்பு அறிக்கை (மன்னிப்பு) வெளியிட முடியாது என்று கூறுகிறீர்கள்.
நீங்களே உருவாக்கிய பிரச்சனைக்கு அரசாங்கத்தின் ஆதரவை எப்படி கேட்கிறீர்கள். நீங்கள் பேசிவிட்டு அதற்கு அரசு பாதுகாப்பு தர வேண்டுமா? மொழி என்பது மக்களுடன் இணைந்த ஒரு உணர்வு. நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல, நீங்கள் ஒரு பொது நபர். சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கூட விசாரிக்கப்படுகிறார்கள். நீங்கள் பெரிய நபர்.
நீங்கள் பெரிய தவறுதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போது கர்நாடகாவில் படத்தை ஓட்ட வேண்டும் என்கிறீர்கள். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது. நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், மன்னிப்பு கேட்டால் இங்கே வரும் வசூல் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் பேசியதை, திரும்பப் பெறலாம். அந்த பேச்சில் இப்போதும் உறுதியாக நிற்கிறீர்களா? இது தமிழ் மற்றும் கன்னட அறிக்கை சண்டை கிடையாது. நீங்கள் பேசியதால் வந்த பிரச்சனை.
நாக்கு தவறி ஏதேனும் நடக்கலாம். ஆனால் தெரிந்த பேசிய விஷயங்கள் அப்படி இல்லை. நீங்கள் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது, ஆனால் மன்னிப்பு கேட்கலாம். உடைந்த முட்டையை மீண்டும் சேர்க்க முடியாது என்று நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
யார் இவர்?
நீதிபதி மகேஷ் நாகபிரசன்னா 6 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனார். அதற்கு முன் சிக்மங்களூர் மாவட்ட நீதிபதியாக இருந்தார். பல முக்கிய வழக்குகளில் அவரின் சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
அர்னாப் கோஸ்வாமி வழக்கு (பிப்ரவரி 2025)
காங்கிரஸ் கமிட்டி அளித்த புகாரை "அலட்சியமானது" என்றும், "பழிவாங்கும் நோக்கம்" கொண்டது என்றும் கூறி, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்தார்.
மடல் விருபாக்ஷப்பா லஞ்ச வழக்கு (டிசம்பர் 2023)
முன்னாள் எம்.எல்.ஏ மடல் விருபாக்ஷப்பாவுக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை லஞ்சம் கேட்டதற்கான அல்லது லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இல்லாததால் ரத்து செய்தார்.
சிலிகாம்ப் தரவு திருட்டு வழக்கு (மே 2025)
வாடிக்கையாளர் தரவு திருட்டு குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஊழியர்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்தார். இது ஒரு வணிகரீதியான தகராறு என்றும், கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஏற்றதல்ல என்றும் கூறினார்..
பாரத் மாதா கி ஜெய் கோஷம் வழக்கு
"பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிடுவது வெறுப்புப் பேச்சு அல்ல என்றும், குழுக்களுக்கிடையில் பகையை வளர்க்காது என்றும் கூறினார்.
மாணவர்களுக்கு எதிரான போலி போதைப்பொருள் வழக்கு (செப்டம்பர் 2024)
போதைப்பொருள் வழக்கில் மாணவர்களை தவறாக சிக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டார்
நீதித்துறை காவலுக்குப் பிறகு இரண்டாவது போலீஸ் காவல் (ஆகஸ்ட் 2023)
நீதித்துறை காவலுக்குப் பிறகு ஒரு குற்றவாளியை இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் வைப்பது அனுமதிக்கப்படாது என்று உத்தரவிட்டார்.
கன்னட சாகித்ய பரிஷத் தலைவருக்கு போலீஸ் பாதுகாப்பு (மே 2025)
கன்னட சாகித்ய பரிஷத் தலைவர் மகேஷ் ஜோஷிக்கு அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications