எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி.. ராஜ கண்ணப்பனுக்கு ஜெயலலிதா செய்யாததை முதல்முறையாக செய்த ஸ்டாலின்!
சென்னை: எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, ஜெயலலிதா அமைச்சரவையில் பல முக்கிய துறைகளை கையாண்டவர். தனிக் கட்சியை தொடங்கியவர்- யார் இந்த ராஜ கண்ணப்பன்.
எம்ஜிஆர் காலத்தில் அரசியல் வந்தவர்தான் எஸ் கண்ணப்பன் எனும் ராஜ கண்ணப்பன். இவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவராக இருந்த போதே எம்ஜிஆர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதிமுகவில் இணைந்தவர். 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதும் தனது அமைச்சரவையில் கண்ணப்பனை இணைத்தார். அவருக்கு பொதுப் பணித் துறை, மின்சாரம், நெடுஞ்சாலை என பல முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டது.
பொதுவாக ஜெயலலிதா அவ்வப்போது தனது அமைச்சரவையை மாற்றிக் கொண்டே இருப்பார். அது போல் மாற்றம் செய்த போது ஒரு முறை கூட ராஜகண்ணப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்கியதில்லை. அவரது இலாகாக்களை பறித்தது இல்லை. அவரிடம் உள்ள துறைகளை மாற்றியதும் இல்லை. ஆனால் கண்ணப்பனுக்கு கூடுதல் துறைகளை கொடுத்துள்ளார்.
காலையிலேயே ஷாக் கொடுத்த மத்திய அரசு! சென்னை அருகே சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு
ராஜ கண்ணப்பன்
வளமான துறைகளை ராஜ கண்ணப்பனுக்கு ஜெயலலிதா வழங்குகிறார் என பரவலாக பேசப்பட்டது. 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. வருமானத்திற்கு அதிகமான 11 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக கண்ணப்பன் மீது புகார் எழுந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறை
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதற்காக கண்ணப்பன் நீதிமன்றங்களுக்கு சென்றார். பின்னர் சசிகலா- நடராஜன் தம்பதியுடன் ஏற்பட்ட பிரச்சினைகளால் அதிமுகவிலிருந்து கண்ணப்பன் வெளியேறினார். இதையடுத்து மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை தொடங்கினார்.
திமுகவுடன் கூட்டணி
2001 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் கண்ணப்பன் இணைந்தார். அவருக்கு இளையான்குடி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் திமுக மீது அதிருப்தி அடைந்த தமிழ் குடிமகன் திமுகவிலிருந்து வெளியேறினார். எனினும் அந்த தேர்தலில் கண்ணப்பன் தோற்று போனார். இதன் பிறகு திமுக கூட்டணியிலிருந்து விலகிய கண்ணப்பன், விசிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார்.
திமுகவில் இணைந்த கண்ணப்பன்
2004 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இதையடுத்து தனது கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்த கண்ணப்பனுக்கு 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் இளையான்குடி தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை கண்ணப்பன் வெற்றியும் பெற்றார். இதனால் மகிழ்ந்த கண்ணப்பன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
திமுக டூ அதிமுக
இதனால் திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்தார். 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப சிதம்பரத்திற்கு எதிராக போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா கொடுத்தார். இந்த தேர்தலில் கண்ணப்பன் மிக குறைந்த அளவிலான வாக்குகளிலேயே தோற்றார். இதனால் நீதிமன்றம் சென்றார்.
ஜெ மறைவு
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூரில் போட்டியிட்டு திமுகவின் பெரிய கருப்பனிடம் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். மறுபடியும் நீதிமன்றத்தில் போராடினார். அதிமுகவில் இருந்தாலும் ராஜகண்ணப்பனுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து வெளியேறி மீண்டும் திமுகவுக்கே வந்தார்.
பிளாஸ்டிக் சேர் சர்ச்சை
பிறகு 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜகண்ணப்பனை முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை பிளாஸ்டிக் சேரில் கண்ணப்பன் உட்கார வைத்ததாக சர்ச்சை எழுந்தது.
சர்ச்சை நாயகன்
எழிலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை, அரசு டெண்டர்களில் ராஜ கண்ணப்பனின் குடும்பத்தினர் தலையீடு, போக்குவரத்துத் துறைக்கு தீபாவளி இனிப்பை வெளியிலிருந்து வாங்கியது என தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய கண்ணப்பன், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதியின் பெயரை சொல்லி திட்டியதாக எழுந்த புகாரின் பேரில் அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார்.