சென்னையில் துணை மேயர் பதவி யாருக்கு? காய்நகர்த்தும் 5 முக்கிய பிரமுகர்கள்! ஸ்டாலின் முடிவு என்ன?
சென்னை: சென்னையில் துணை மேயர் பதவியை குறிவைத்து திமுகவில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள 5 முக்கியப் பிரமுகர்கள் காய் நகர்த்துவதால், யார் போட்டியில் வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கே.கே.நகர் தனசேகரன், சைதை மகேஷ்குமார், சிற்றரசு, மதன்குமார், இளைய அருணா ஆகிய ஐவரில் ஒருவரை துணை மேயர் வேட்பாளராக திமுக தலைமை மறைமுகத் தேர்தலில் நிறுத்தும் எனத் தெரிகிறது.
200 வார்டுகளை கொண்ட சென்னை பெருநகர மாநகராட்சியில் திமுக 150 வார்டுகளையாவது கைப்பற்றும் என உறுதியாக நம்புகிறது அக்கட்சியின் தலைமை.

உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும் சூழலில், வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது. இதேபோல் மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

பெண் மேயர்
இந்நிலையில் இப்போதே பல வேட்பாளர்கள் மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளை குறித்து தங்களுக்காக அணி திரட்டும் பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சியில் துணை மேயர் பதவியை பிடிப்பதற்காக திமுகவில் 5 முக்கியப் புள்ளிகள் அறிவாலயத்தில் காய் நகர்த்தி வருகிறார்கள். திமுக அதிக இடங்களில் வெல்லும்பட்சத்தில் எஸ்.சி.பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை மாநகராட்சியாக வரவிருக்கிறார்.

அமைச்சருடன் நெருக்கம்
இந்நிலையில் மேயருக்கு அடுத்த பதவியான துணை மேயர் பதவியை குறித்து திமுக பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் பகுதிச்செயலாளருமான கே.கே.நகர் தனசேகரன் இப்போதே அதற்கான முன்னோட்ட பணிகளை தொடங்கிவிட்டார். இதேபோல் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் சைதாப்பேட்டை மகேஷ்குமாரும் துணை மேயராக வேண்டும் என்ற விருப்பத்தில் செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவருமே தென் சென்னை மாவட்டத்தில் வரக்கூடியவர்கள்.

துணை மேயர் ரேஸ்
இவர்களுக்கு அடுத்தபடியாக மாவட்ட பொறுப்பாளரும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்படும் சிற்றரசு துணை மேயர் ரேஸில் இருக்கிறார். இதேபோல் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி பகுதிச்செயலாளர் மதன்குமார் என்பவரும் துணை மேயர் கனவில் இருக்கிறார். அடுத்ததாக வடசென்னை பகுதியை சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர் இளைய அருணா என்பவரும் துணை மேயர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

22-ம் தேதிக்கு பிறகு
துணை மேயர் பதவிக்கு போட்டிபோடும் அனைவருமே முக்கியமானவர்களாக இருப்பதால் இதில் யாரை முதல்வர் ஸ்டாலின் வேட்பாளராக முன்னிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முடிவுகள் வெளிவரும் 22-ம் தேதி பிறகு மறைமுகத் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்துவது பற்றி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களோடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து முறைப்படி நகராட்சி, மாநகராட்சி வாரியாக அறிவிப்பு வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications