எதிர்க்கட்சி தலைவர் யார்.. மாறி மாறி வாக்குவாதம்.. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மே 10க்கு ஒத்திவைப்பு
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மே 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் அதிமுக கூட்டம் திங்கள்கிழமைக்கு தள்ளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் முடிவு எட்டப்படாமல் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
'லீடர்'.. 12வது வரிசை தந்த அதிமுகவை.. அருகிலேயே அமர வைத்து அழகு பார்த்த ஸ்டாலின்.. மாஸ் சம்பவம்!
யார் எதிர்கட்சி தலைவர்
அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபையில் வலுவான எதிர்க்கட்சியாகி உள்ளது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வம். முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரில் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராகப்போவது உறுதியாகி உள்ளது. ஆனால் யார் என்பதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் விருப்பம்
எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்று ஒரு தரப்பும், ஒ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்றும் ஒரு தரப்பும் விரும்பியது. இதனால் இருதரப்பினும் காரசாரமாக விவாதித்தனர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
எடப்பாடி பதிலடி
தோல்விக்கு யார் என இரு தரப்பும் மாறி மாறி குறை சொல்லி கடுமையாக விவாதித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுதான் காரணம் என ஓபிஎஸ் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியோ,தேர்தலுக்கு செலவு செய்தது யார், கொங்கு பகுதியில் அதிக வெற்றி பெற்றுள்ளோம். எப்படி விட்டுக்கொடுப்பது என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது
கூட்டம் ஒத்திவைப்பு
இதனிடையே அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நீண்ட நேரத்திற்கு முடிவுக்கு வந்தது. இரு தரப்பு ஆதரவாளர்களும் மாறி மாறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் யார் என முடிவு எட்டப்படவில்லை. கூட்டம் முடிந்த பிறகு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.