யார் இந்த முகுந்தன்? அவருக்காகவே மா.செக்கள் கூட்டத்தை கூட்டும் ராமதாஸ்? அவ்ளோ முக்கியமான ஆளா?
சென்னை: பாமக மாநாட்டு மேடையில் முகுந்தன் அமர வைக்கப்படாதது தொடர்பாக நாளை நடைபெறும் பாமக மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் பாமக தலைவர் ராமதாஸ் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் ராமதாஸால், அந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் முகுந்தன் யார்?
பாமகவின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற மாநாடு என்பதால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள பங்கேற்றனர். மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு, தனியார்துறையில் இட ஒதுக்கீடு என மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராமதாஸ் பேச்சு
இந்நிலையில் இந்த மாநாட்டில் உரையாற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், இவ்வளவு நாள் தன்னுடைய பேச்சைக் கேட்டீர்கள், இடையில் மறந்தீர்கள். அன்று தனியாக 4 தொகுதிகளில் வென்ற நாம் இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளோம், இது நமக்கு அசிங்கமா இல்லையா? நம்ம ஆளுங்க நமக்கே ஓட்டு போடல என்றும் காட்டமாகப் பேசினார்.
ராமதாஸின் பேச்சு நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது.
இளைஞரணி தலைவர் முகுந்தன்
பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டு மேடையில் பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் அமர வைக்கப்படவில்லை. இதுதொடர்பாகவே நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் மாநாட்டை பாமக தலைவர் ராமதாஸ் கூட்டி இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்கள் நிலவி வரும் சூழலில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
யார் இந்த முகுந்தன்?
முகுந்தன் பரசுராமன், ராமதாஸின் மகள்வழிப் பேரன் ஆவார். அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி - பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன். பாமகவில் மாநில ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்தார். அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக, முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். முகுந்தன் இன்று முதல் பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு உதவியாக செயல்படுவார்" என்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, "அவன் 4 மாதம் முன்புதான் வந்தான். அவனுக்கு என்ன அனுபவம் உள்ளது? அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா? நல்ல அனுபவசாலியாக போடுங்கள்" என்றார். அதற்கு பதிலளித்து ராமதாஸ் கூறும்போது, "நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும், நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கலைன்னா, யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இதுநான் உண்டாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்காவிட்டால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது" என்றார்.
அன்புமணி - ராமதாஸ் தொடரும் மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையில் கருத்து வேறுபாடு எழுந்ததால், மோதல் போக்கு உருவாகி இருக்கிறது. ஏற்கனவே பாமக தலைவராக நானே இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்ததோடு, நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டவன் என்றும் கூறி இருந்தார். இந்தச் சூழலில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications