தாம்பரத்தில் கேட்ட அந்த சத்தம்.. படகில் மிதந்து வந்த தேவதை யார்? எட்டிபார்த்த ஜனம்.. பெருகும் நன்றி
சென்னை: தாம்பரம் பகுதி மக்கள் பலத்த பாதிப்புகளில் சிக்கி உள்ள நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கு பலரும் திரண்டு வந்து நன்றிகளை சொல்லி வருகிறார்கள்.
மிக்ஜாம் புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது சென்னை மாநகரம்.. அதிலும், சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவேயில்லை..

மாநகராட்சி: மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில், பெரும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது தாம்பரம், பல்லாவரம் தொகுதிகள்.. இங்குள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கிவிட்டன..
குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர், சி.டி.ஓ காலனி, மூகாம்பிகை நகர், குட்வில் நகர், கண்ணன் அவென்யூ, லட்சுமி நகர், பாரதி நகர், பழைய பெருங்களத்தூர், பழைய ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை, ராஜகீழ்ப்பாக்கம், திருமலை நகர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை, ராதா நகர், நெமிலிச்சேரி, பல்லாவரம் - குன்றத்துார் சாலை, முடிச்சூர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது..
இதனால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது.. எனவே, எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்ஆர்ராஜா, பல்லாவரம் கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் அன்சூல் மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறார்கள். தற்போது, தாம்பரம் பகுதிகளில் மழையால் பாதித்த சுமார் 1,700க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம்: இதனிடையே, ஏராளமான சமூக ஆர்வலர்கள், பிரமுகர்கள் தங்களால் முடிந்த உதவுகளை செய்து வருகிறார்கள். தாம்பரத்தில் பல தெருக்களில் நீர் நிறைந்து கிடப்பதால், படகு போக்குவரத்துதான் நடக்கிறது.
அந்தவகையில், வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. தாம்பரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக, பெண்மணி ஒருவர் நிவாரண பொருட்களை படகில் கொண்டு செல்கிறார். அவருடன் நான்கைந்து பேர் படகில், ஏராளமான பைககளில் உணவு பொருட்களுடன் உட்கார்ந்துள்ளனர்.
பாக்கெட்டுகள்: ஒரு தெருவுக்குள் படகில் சென்ற அந்த பெண், "நான் பேசுறது உங்களுக்கெல்லாம் கேட்குதா? எல்லா மளிகையும் கொண்டுவந்திருக்கேன்.. பால், பிஸ்கட், பிரெட் பாக்கெட்டுகளை கொண்டு வந்திருக்கேன்.. யாருக்காவது வேணுமா? யாராவது தனியா வீடுகளில் சிக்கியிருக்கீங்களா? உதவி வேணுமா? யாரையாவது எமர்ஜென்சியா வெளியே வரணும்னு நினைக்கிறீங்களா? யாரையாவது வெளியே கொண்டுவரணுமா?
வீட்டின் மாடியிலிருந்து பக்கெட், பைகள் இருந்தால், கயிறு கட்டி கீழே போடுங்க.. அதில் பொருட்களை போட்டு தருகிறோம்" என்று சத்தமாக கத்தியவாறே தெருக்களில் சென்றார்.
மாடி வீடுகள்: இதையடுத்து, அந்த சத்தத்தை கேட்டு மாடி வீடுகளில் வசிப்பவர்கள் எட்டிப்பார்த்து, பக்கெட்களை கயிறுகளை கட்டி கீழே இறக்கினர்.. அவைகளில், பால், தண்ணீர் பாட்டில், உணவுப்பொருட்கள் உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் போடப்பட்டன.. அதேபோல, தரைத்தளத்தில் இருக்கும் வீட்டுக்காரர்கள், கையில் பக்கெட்டுகள், பைகளுடன் தண்ணீரில் நீந்தியாவாறே நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்..

சிலர் வீடுகளை விட்டு நீந்திக்கூட வெளியே வரமுடியாத சூழலில் சிக்கியிருந்தனர். அவர்களது வீட்டின் அருகில் சென்ற இந்த பெண், பால் பொருட்கள், பிரெட், உணவுப்பொருட்களை தூக்கி வீசவும், அதை வீட்டின் உரிமையாளர்கள் அதை லாவகமாக கீழே விழுந்துவிடாமல் பெற்றுக்கொண்டனர்..
நன்றிகள்: இந்த தெருக்களில் எல்லாம் தண்ணீர் வடிய இன்னும் பல நாட்கள் பிடிக்கும் என தெரிகிறது. அந்தவகையில், தேடிச்சென்று பசியில் தவித்தோருக்கு உணவு பொருட்களை தந்து வரும் இந்த "படகு தேவதை" யார் என்று தெரியவில்லை.. ஆனால், இதயம் நிறைந்த நன்றிகளை மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications