மோடி To லேடி வரை எதிர்த்தவர்.. 245 தேர்தல்களில் நின்றவர்.. பிரியங்காவுக்கு சவால்விடும் தமிழர்
சென்னை: 245 ஆவது முறையாக வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிடுகிறார் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன். இவர் யார்? ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்? இவரது லட்சியம்தான் என்ன?
மதம், சாதி என்ற பாகுபாடு பார்க்காமல் இந்தியாவில் நடைபெறும் ஒரே திருவிழா எது தெரியுமா? வேறு என்ன? தேர்தல்தான். பல திருவிழாக்கள் இருந்தாலும் ஜனநாயக திருவிழா என்பது தேர்தல்தான். இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் பொறுப்பாக வேட்பாளர்களை நேர்காணல் செய்து அதற்காகப் பல கோடிகளைச் செலவு செய்து மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வெற்றி பெறுகின்றன. ஆனால், 244 முறை ஒரு மனிதர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த பிறகு வயநாட்டில் பிரியங்கா காந்தியை எதிர்த்து 245 ஆவது முறையாக தேர்தல் களத்தில் வேட்பாளராகக் களம் கண்டிருக்கிறார்.

இதனாலேயே இவரைப் பலரும் தேர்தல் மன்னன் என்று அடைமொழிப் போட்டு அழைக்கின்றனர். சில மாதங்கள் முன்பு விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நின்று தோல்வியடைந்த இந்தத் தேர்தல் மன்னன் கே. பத்மராஜன், இதுவரை முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்,வாஜ்பாய் தொடங்கி ஜெயலலிதாவரை எதிர்த்து நின்று தைரியமாகக் களம் கண்டுள்ளார். அத்தனை தேர்தல்களிலும் வாக்காளர்கள் இவருக்கு வாரி வாரி தோல்வியைப் பரிசாக வழங்கியுள்ளனர். வேறு ஒருவராக இருந்தால் இத்தனை தோல்விகளைக் கண்டு கலங்கிப் போய் இருப்பார்கள். இவரோ தனது தோல்வியின் எண்களை அதிகப்படுத்த அடுத்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.
கோயம்புத்தூர் அருகே இருக்கும் மேட்டூரைச் சேர்ந்த 65 வயதான கே. பத்மராஜன், பிரியங்கா காந்தியைத் தேர்தல் களத்தில் எதிர்கொள்வதற்காக வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்காக வயநாடு இப்போது காத்திருக்கிறது. என்னதான் தமிழ்நாட்டில் இவர் வசித்து வந்தாலும் இவரது பூர்வீகம் என்னவோ கேரளாதான். கண்ணூரில் தான் இவரது உறவினர்கள் உள்ளனர். இவருடைய தாத்தா பி கேலு நம்பியார் பையன்னூரைச் சேர்ந்தவர். இவரது குலதெய்வமே சபரிமலை ஐயப்பன்தான்.
கே. பத்மராஜன் முதன்முதலாக 1988இல் போட்டியிட்டார். அப்போது முதல் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய் என தொடங்கி இன்றைய பிரதமர் நரேந்திர மோடி எதிர்த்து களம் கண்டுள்ளார். அதற்கு மேல் எதிர்க்கட்சி தலைவர்களே நேரடியாக தேர்தல் களத்தில் எதிர்கொள்ள தயங்கும் ஐயர்ன் லேடியான ஜெயலலிதாவையே எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார்.
இதுவரை தேர்தல் டெபாசிட் தொகையாகவும் பரப்புரை செலவுக்காகவும் சேர்த்து ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறேன் என்று சொல்கிறார் பத்மராஜன். இருந்து ஒருமுறை கூட இவர் வெற்றியை முத்தமிட்டதில்லை. கடந்த 40 வருடங்களாக இவர் கழுத்தில் தாங்கி நிற்கும் அனைத்தும் தோல்வி மாலைகள்தான். அதனால் என்ன? அதிலும் ஒரு சாதனையை அவர் பதிவு செய்துள்ளார். லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் 'மிகவும் தோல்வியுற்ற வேட்பாளர்' என்ற சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். எனவே இவரைச் சொந்த ஊர் மக்கள் தேர்தல் மன்னன் என்று அழைக்கிறார்கள்.
அடிப்படையில் இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். ஆனால், இப்போது இவர் மேட்டூரில் பஞ்சர் ஒட்டும் கடையை நடத்தி வருகிறார். அதன் மூலம் வரும் வருமானத்தில்தான் இவரது வாழ்க்கை சக்கரம் உருண்டு ஓடிக்கொண்டுள்ளது. தேர்தல் அனுபவம் பற்றி பத்மராஜன் பேசுகையில், “ஒவ்வொரு பிரச்சாரமும் ஒரு கொண்டாட்டம்தான். அதில் சில அந்தஸ்தையும் அனுபவித்து இருக்கிறேன். மக்களிடம் வாக்கு கேட்டுப் போகும்போது அவர்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்கிறார்
இவர் 1991 ஆம் ஆண்டு பி.வி. நரசிம்ம ராவை எதிர்த்து எதிராக ஆந்திர மாநிலம் நந்தியாலில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதை விரும்பாத நரசிம்ம ராவின் ஆதரவாளர்கள் எரிச்சலடைந்தனர். எனவே இவரை காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கடத்திச் சென்றுவிட்டனர். அது ஆந்திராவில் அந்தக் காலத்தில் பரபரப்பு செய்தியாக மாறியது. அதைப் பற்றி பத்மராஜன், “என்னைக் கடத்திக் கொண்டு போய் ஒரு காட்டுக்குள் தொலைதூரத்தில் விட்டார்கள். பின்னர் எப்படியோ வழியைக் கண்டுபிடித்து வந்துவ்ட்டேன். இதனால் கிடைத்த பிரபலத்தால் 500 வாக்குகளைப் பெற்றேன்” என்கிறார்.
பல பிரதமர்களை எதிர்த்துப் போட்டியிட்ட இவருக்கு ராஜீவ்காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது மனதிற்கு வருத்தமளிக்கிறது என்கிறார் இந்த 400 தேர்தல்களைக் கண்ட அபூர்வ சிந்தாமணி. 1996களில் தேர்தல் சட்ட விதிமுறைகள் கடுமையாக இல்லை. ஒருவேட்பாளர் எத்தனை தொகுதிகளில் போட்டியிட முடியும் என்ற வரைமுறை வகுக்கப்படவில்லை. அதைப் பயன்படுத்து கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி என 5 மக்களவைத் தொகுதிகளிலும் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் இவர் வேட்புமனு தாக்கல் செய்தார். ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதற்கு தன்னைப் போன்ற வேட்பாளர்களும் முக்கிய காரணம் என்கிறார் இவர்.
2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆர். ஆர். பார்த்திபனை எதிர்த்து நின்று இவர் பெற்ற 6,273 வாக்குகள்தான் அதிகபட்சமாகப் பெற்றது. குறைந்த பட்சமாக முட்டை எடுத்தாலும் மனம் தளரமாட்டேன் என்றும் இவர் சொல்கிறார். “சாகும்போது யாரும் எதையும் கொண்டு போவதில்லை. ஆகவே நான் இந்தத் தேர்தல் வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கிறேன். ஒருவர் தன் வாழ்க்கையை அனுபவிப்பது மிகவும் முக்கியம்” என்றார்.
மேலும், “பலருக்கும் நான் ஒரு ஜோக்கர் என்பது தெரியும். என் நெருங்கிய நண்பர்கள் கூட தங்களின் வாக்குகளை எனக்குப் போட்டு வீணடிக்க மாட்டார்கள்” என்று கூறிவிட்டுச் சிரிக்கிறார். இதுவரை இவர் தேர்தலுக்காக சில லட்சங்களுக்கு மேல் செலவு செய்ததில்லை. “முக்கிய நகரங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்வேன். ஊர் ஊராகச் சுற்றமாட்டேன். எனவே செலவு அதிகமாகாது. தேர்தல் விதிகளின்படி, ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் ரூ.95 லட்சம் வரை செலவழிக்கலாம். ஆனால், நான் அதை விட மிகக் குறைவாகவே செலவு செய்வேன்” என்கிறார்.
1988இல் அவர் தேர்தலில் போட்டியிடத் தொடங்கிய காலகட்டத்தில் சட்டமன்றத்திற்கு 250 ரூபாயும் மக்களவைக்கு 500 ரூபாயும் டெபாசிட் தொகையாக இருந்துள்ளது. . அது இன்றைக்கு முறையே 10,000 ரூபாயாகவும் 25,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இவர் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், பரிசீலனையின் போது இவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. “எனது உடல்நிலை என்னை அனுமதிக்கும் வரை நான் தேர்தலில் போட்டிப் போடுவேன். ஒவ்வொரு குடிமகனும் வேட்பாளராக நிற்க உரிமை உண்டு” என்கிறார் இந்தத் தேர்தல் மன்னன்.












Click it and Unblock the Notifications