ஓபிஎஸ் போஸ்டர்! யார் ஒட்டுனது?... விசாரித்த எடப்பாடி பழனிச்சாமி? "அவர்தான்" என தெரிந்ததும் கோபம்
சென்னை: சென்னையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியது யார் என்ற விவரங்களை எடப்பாடி பழனிச்சாமி கேட்டு தெரிந்து கொண்டதாக தெரிகிறது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதற்குள் என்னென்ன விஷயங்கள் நடக்குமோ தெரியவில்லை. நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்ததிலிருந்து கிரீன்வேஸ் சாலையே பரபரப்பில் உள்ளது.
முன்னாள் அமைச்சர்களின் கார்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் குவிந்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் என்ன மாதிரியான திருப்பங்கள் வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஓபிஎஸ் தென் மாவட்டங்கள்
இத்தனை நாட்களாக ஓ பன்னீர் செல்வத்திற்கு தென் மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு என்றும் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் ஆதரவு என நினைத்திருந்த நிலையில் சென்னையிலும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அலை வீசுகிறது என்பது நேற்று ஒரே நாளில் தெரிந்துவிட்டது.

சென்னை
இதை எடப்பாடியும் புரிந்து கொண்டார். சென்னையில் பெரும்பாலான இடங்களில் அதாவது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் கோட்டையில் கூட ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேரதிர்ச்சியை தந்தது.

விசாரணை
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி கட்சியினரிடையே விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது போஸ்டர் ஒட்டியவர் பெயரை அவர்கள் கூறியதும் எடப்பாடி பழனிச்சாமி கோபமடைந்ததாகவும் அவர் ஒட்டும் வரை நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

போஸ்டர் ஒட்டியது யார்
சென்னையில் அதிலும் ராயபுரத்தில், ஜெயக்குமாரின் கோட்டையையும் விட்டுவைக்காமல் போஸ்டர் ஒட்டியது வேறு யாருமில்லையாம்- ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் என சொல்லப்படுகிறது. இவர்தான் சென்னை மாவட்டச் செயலாளர்களை மீறி தனது தந்தைக்கு ஆதரவாக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டுவதை போல் ஒட்டியதாகவும் தகவலறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

கிழித்தது யார்
இதுகுறித்து ஜெயபிரதீப் தரப்பினரிடம் கேட்ட போது அவர்கள் தேனி மாவட்டத்தில் அதாவது ஓபிஎஸ் கோட்டைக்கு புகுந்து எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டும் போது நாங்கள் செய்யக் கூடாதா என்ற கேள்வி நம்மிடம் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மூத்த நிர்வாகிகளின் உத்தரவின்பேரில்தான் ஓபிஎஸ் போஸ்டர் கிழிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஜெயபிரதீப் விமர்சனம்
ஏற்கெனவே ராமநாதபுரத்தில் ஒரு கோயில் விழாவில் அதுவும் கட்சி சார்பிலான விழாவில் கட்சியை சாராத ஜெயபிரதீப்பின் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி அந்த மாவட்ட செயலாளர்களை அழைத்து எச்சரித்தார். கட்சியினரல்லாத ஒருவருடைய பேனரை எப்படி வைக்கலாம் என கோபப்பட்டார். இதற்கு ஜெயபிரதீப் பதில் அளிக்கையில் , என் மீதான பாசத்தின் காரணமாக பேனர் வைத்து விட்டார்கள், நான் யாரையும் பேனர் வைக்க வேண்டாம், மாலை அணிவிக்க வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொண்டேன். ஆனால் என் மீதிருந்த அன்பின் காரணமாக வைத்துவிட்டார்கள். எனது புகைப்படத்தை பார்த்து ஒரு சிலருக்கு மனம் வேதனைப்பட்டிருந்ததால் அவர்களிடத்தில் எனது வருத்தத்தை தெரிவித்து்க கொள்கிறேன் என ஒரு எடப்பாடியை மறைமுகமாக ஜெயபிரதீப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications