அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்.. ரூம் ரெடி, துறையும் ரெடி.. செயலாளர் யார் தெரியுமா?
சென்னை: அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த துறையின் செயலாளராக யார் நியமிக்கப்படுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், அமைச்சர்களின் நீண்ட நாள் கோரிக்கையை உதயநிதியே தலைவரை (ஸ்டாலினை) சங்கடப்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி ஆளுநரும் ஓகே சொல்லிவிட்டார். எனவே நாளை காலை 9.30 மணி அளவில் ராஜ் பவனில் உள்ள தர்பார் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அவருக்கு எந்த துறை கொடுக்கலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்தன.

முதல்வராக கருணாநிதி
முதல்வராக கருணாநிதி இருந்த போது ஸ்டாலின் வகித்து வந்த உள்ளாட்சித் துறை உதயநிதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்ததாம். ஆனால் அந்த பதவி தற்போது மூத்தவரிடம் இருப்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டுவிட்டதாம். சீனியர்களிடம் இருந்து பதவியை பறித்து அதை மகன் உதயநிதியிடம் கொடுத்தால் அது பிரச்சினையை ஏற்படுத்தும் என முதல்வர் கருதுகிறாராம்.

கலகம்
இதனால் கட்சிக்குள் எந்த கலகமும் வெடிக்காமல் இருக்கவும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எந்த பாதிப்பும் வராமல் இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் அந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்து விளையாட்டுத் துறையை உதயநிதிக்கு அளிக்கலாம் என முதல்வர் முடிவு செய்துள்ளாராம்.

மெய்யநாதன்
மெய்யநாதனை சமாதானப்படுத்தி அவருக்கு நல்லதொரு பதவியோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்போ வழங்கப்படலாம் என தெரிகிறது. மேலும் யாரையும் பகைத்துக் கொள்ளலாம் உதயநிதிக்கு என தனியொரு துறையை உருவாக்கி அதற்கு அமைச்சராக்கவும் திட்டமிட்டுள்ளாராம். உதயநிதி அமைச்சராகும் போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பிசிறு தட்டாமல் இருக்க வேண்டும் என முதல்வர் கருதுகிறார்.

ஐஏஎஸ் அதிகாரி
இதனால் அரசுக்கு எந்தவித அவப்பெயரும் ஏற்படாதவாறு விஷயம் தெரிந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியை உதயநிதிக்கு செயலாளராக நியமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருக்கும் ககன்தீப் சிங் பேடியை நியமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முதல்வர் கனவு திட்டம்
அவ்வாறு அவரை நியமித்தால் முதல்வரின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியுடன் துறை செயலாளர் பதவியும் ககன்தீப் சிங்கிற்கு கொடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் நாளை இந்த நேரத்திற்ககெல்லாம் நமக்கு பதில் கிடைத்துவிடும்.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் பாதிப்பின் போது சென்னை காசிமேடு துறைமுகத்தை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் 10ஆம் தேதி சென்றிருந்தார். அப்போது முதல்வரின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏ எபினேசர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தொங்கியபடியே பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ககன்தீப் சிங் இதுவரை வகித்த எந்த பதவிகளிலும் ஒரு குறையே சொல்லாதபடி அவரது செயல்பாடுகள் இருந்தன.












Click it and Unblock the Notifications