ரூ.2 ஆயிரம் நோட்டு பஞ்சாயத்து.. சரி அது என்ன 8 மணி சிண்ட்ரோம்.. யார் யாருக்கெல்லாம் பாதிப்பு பாருங்க
சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் இந்த நோட்டுகளை கொடுத்து வேறு நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பலதரப்பட்ட மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
2016 பிளாஷ் பேக்: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி இன்று முதல் 500 மற்றும் 1,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியிருந்தார். மக்களுக்கு அவர் என்ன பேசுகிறார் என்பது அப்போது புரியவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர்.

சிலர் இந்த வரிசையில் நின்றே இறந்தும் போனார்கள். பல இடங்களில் சண்டையும், குழப்பமும் ஏற்பட்டது. இதனையடுத்து கூடுதல் ரூபாய் நோட்டுக்கள் தேவைப்படும் என்பதை உணர்ந்த ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. மங்கள்யான் விண்கலம் படம் அச்சிடப்பட்ட இந்த ரூபாய் நோட்டு கருப்பு பணம் ஒழிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சொல்லப்பட்டது. அதாவது இந்த நோட்டில் 'சிப்' பொருத்தப்பட்டிருக்கும், இதை பதுக்கினால் அரசு உடனடியாக கண்டுபிடித்துவிடும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் கருப்புப்பணம் எவ்வளவு ஒழிக்கப்பட்டது என்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. அதே நேரத்தில் இந்த நோட்டின் பயன்பாடும் கணிசமாக குறைந்தது. இதையெல்லாம் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்த ரிசர்வ் வங்கி 2018-2019ம் ஆண்டில் இந்த நோட்டை பிரிண்ட் செய்வதையே நிறுத்தி வைத்துவிட்டது. இதனையடுத்து, இதன் பயன்பாடும் வெகுவாக குறைந்துவிட்டது. ஏடிஎம், வங்கிகளில் கூட இந்த நோட்டு கிடைக்கவில்லை.

வாபஸ்: 2022ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 214 கோடி 2 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதன் மதிப்பு ரூ.4.28 லட்சம் கோடி. இந்நிலையில்தான் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கும் இந்த நோட்டுகளை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றாக வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். இந்த காலக்கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் வெளிச்சந்தையில் வாங்கப்படாது என்று கூறியிருந்நதது.
பாதிப்புகள் யார் யாருக்கு?: ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை விளிம்பு நிலை மக்கள் தொடங்கி நடுத்தர முதல் அரசியல்வாதிகள் வரை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா தொற்று பின்னர் மக்கள் தங்கள் கைகளில் சிறிய சேமிப்பை பத்திரப்படுத்தி வைக்க தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு 200, 500, ஆகிய நோட்டுகளை சேமித்த வைப்பதை காட்டிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சேமித்து வைப்பது எளிதானது.
இதனை உடனடியாக எடுத்து செலவு செய்துவிடமாட்டார்கள். இந்த அளவுக்கு பெரிய தேவை ஏற்பட்டால்தான் இதை எடுத்து செலவு செய்வார்கள். எனவே சேமிக்க இந்த 2 நோட்டுகள் வசதியானதுதான். இதே 200, 500 ரூபாய் நோட்டுகள் எனில் அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது. எனவே சீக்கிரமாக வெளியில் எடுத்து செலவு செய்துவிடுவார்கள். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ரிசர்வ் வங்கி அறிவிப்பு குடும்ப தலைவிகளை பாதிக்கும்.
ரியல் எஸ்டேட்: குடும்ப தலைவிகளுக்கு அடுத்து பெரும்மளவில் பாதிப்புக்கு உள்ளாபவர்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்கள்தான். பெருமளவு நிலங்களை வாங்குவது ஆன்லைன் பேமென்ட் செய்ய முடியாது. எனவே 2000 ரூபாய் நோட்டுகள் இந்த பண பரிமாற்றத்திற்கு ஏற்றவையாகும். மட்டுமல்லாது இடத்தை ரிஜிஸ்டர் செய்வது போன்றவற்றிற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கும். அப்படி கொடுத்தால்தான் வேலை சீக்கிரம் நடக்கும். எனவே இவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தங்க நகைக்கடைகள்: நகை வியாபாரம் என்பது பெரிய நெட்வொர்க். தங்கம்தான் எதிர்க்காலம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். எனவே அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது பலர் பில்லை கட்டாமல் நகை வாங்குவார்கள். இப்படி வாங்குவதற்கு இரண்டு நோக்கம் இருக்கிறது. ஒன்று ஜிஎஸ்டியை தவிரக்க. மற்றொன்று சொத்து குவிப்பை வெளிகாட்டாமல் இருக்க. இது இரண்டுக்கும் ரொக்க பண பரிவரித்தனைதான் நடைபெறும்.
ஆன்லைன் டிரான்ஸாக்ஷன் இருக்காது. இப்படி ரொக்க பண பரிவர்த்தனைக்கு 2 ஆயிரம் நோட்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இப்படி பெரும் அளவில் தங்கம் வாங்கும் நபர்கள் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படுவார்கள்.
அந்நிய செலாவணி: பொதுவாக சர்வதேச விமான நிலையங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் முறைசாரா அந்நிய செலாவணி மையங்கள் இருக்கும். இங்கு டாலரை கொடுத்தால் ரூபாய் கிடைக்கும். அதேபோல ரூபாய் கொடுத்தால் டாலர் கிடைக்கும். இப்படி முறைசாரா அந்நிய செலாவணி மையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ரூபாய் தாள்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான். எனவே இவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
அரசியல் கட்சியினர்: நாட்டின் ஏதாவதொரு மூளையில் தேர்தல்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த தேர்தல்களில் மக்களுக்கு பணம் விநியோக்கிக்க அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத்தான் பயன்படுத்துகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கவும் இந்த நோட்டுகள்தான் பயன்படுகிறது. எனவே இவர்களும் இந்த ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பாதிக்கப்படுவார்கள்.
திருமணம்: இந்த வரிசையில் கடைசியாக இருப்பவர்கள் திருமண வீட்டார்கள்தான். திருமணத்திற்கான செலவுகள் பெரும்பாலும் ரொக்கத்தில்தான் நடைபெறுகிறது. வாழை மரம் கட்டுவது தொடங்கி கடைசியில் தாலி கட்டுவது வரை இருக்கும் செலவுகள் அனைத்திற்கும் ரொக்கம்தான் ஈஸியாக இருக்கும். எனவே இவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
8 மணி சிண்ட்ரோம்: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் மக்கள் எப்படி வங்கி வாசலில் நின்றார்களோ அதேபோல இப்போதும் மக்கள் வங்கி வாசல்களில் வரிசையில் நிற்க நேரிடலாம். ஒருவர் ஒருமுறை ரூ.20 ஆயிரம் வரைதான் நோட்டுகளை மாற்ற முடியும் என்பதால் வரிசை சற்று நீளமானதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை பொருளாதார நிபுணர்கள் 8 மணி சிண்ட்ரோம் என்று குறிப்பிடுகிறார்கள்.
8 மணி சிண்ட்ரோம் என்பது உடலின் உட்புற கடிகாரத்தை பாதிக்கும் ஒரு அரிய நரம்பியல் கோளாறு ஆகும். இது சாதாரண தூக்கம்-விழிப்பு சுழற்சியை பராமரிக்க இயலாமையால் ஏற்படுகிறது. இதேபோலதான் தற்போது ரிசர்வ் வங்கி மற்றும் ஏற்கெனவே மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications