5 மணி சம்பவம்: பாஜகவில் இணையப்போவது யார்? “வேட்டி கட்டுவாரா? புடவையா?” வானதி சீனிவாசன் கூல் ரிப்ளை!
சென்னை: 5 மணிக்கு பெரிய சம்பவம் நடக்கப்போவதாக பாஜகவினர் பில்டப் கொடுத்து வரும் நிலையில், அது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் கேட்டதற்கு, அவர் சிரித்தபடி நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது. அண்ணாமலையின் இந்த நடைபயணம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண் என் மக்கள் வெற்றி விழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.

இந்நிலையில், மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "மற்ற கட்சி தொண்டர்களை கஷ்டப்பட்டு அதிமுகவினர் வலை போட்டு சேர்க்கின்றனர். ஆனால் நாங்கள் தலைவர்களை இழுக்கிறோம். கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது. நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்." என்று பொடி வைத்துப் பேசி இருந்தார்.
அண்மையில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள், ஒரு திமுக முன்னாள் எம்.பி ஆகியோர் டெல்லிக்குச் சென்று பாஜகவில் இணைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் எம்ஜிஆர் காலத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர்கள். அதைத்தொடர்ந்து, விளவங்கோடு சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.
5 மணிக்கு கோவையில் பெரிய தலைகள்: இந்த நிலையில் தான் இன்று 5 மணி வரை காத்திருங்கள், பெரிய விக்கெட் விழப்போகிறது என அண்ணாமலை இலை மறை காயாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பெரிய தலைகள் யாரும் இன்று மாலை 5 மணிக்கு பாஜகவில் இணையப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி செயலாளரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், இன்று மாலை 5 மணிக்கு பாஜகவில் முக்கிய தலைவர்கள் இணைவதாக கூறப்படுகிறதே எனக் கேள்வி எழுப்பினர்.
பாஜகவில் இணைய இருப்பவர் எத்தனை அடி உயரத்தில் இருப்பார்?: அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், "இப்போ மணி எவ்வளவு? 5 மணி ஆவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் தானே? நீங்கள் எல்லாம் இல்லாமலா நாங்கள் கட்சியில் சேர்க்கப் போகிறோம். உங்கள் அனைவரையும் வைத்துக்கொண்டு தானே சேர்க்கப் போகிறோம்." என்றார்.
பாஜகவில் சேரப்போகும் நபர் கோவையைச் சேர்ந்தவரா என செய்தியாளர்கள் க்ளூ கேட்க, "அவர் எத்தனை அடி உயரத்தில் இருப்பார்? அவர் எந்த நேரத்தில் வேட்டி கட்டுவார்? புடவை கட்டுவார்? என்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? இன்னும் கொஞ்ச நேரம் தான். பொறுங்க.. உங்களை எல்லாம் வைத்துக்கொண்டுதான் எல்லாம் நடக்கும்" என சிரித்தபடி கூறினார் வானதி.
பண பேரம்?: மேலும் பேசிய வானதி, "எங்கள் கட்சியில் இணைபவர்கள் அத்தனை பேரும் எங்கள் கட்சியின் கொள்கைகளை பிடித்து, புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை பார்த்து, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்துத்தான் வருகிறார்கள். அதை பொறுக்க முடியாதவர்கள் தான் பண பேரம் என்பது போன்ற அவதூறான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் போய் இழுத்து வர முடியுமா? அவர்களாக சொந்தமாக முடிவு செய்யாமல் நாங்களாக இழுத்து வர முடியுமா? வீடுகளில் இருக்கும் குழந்தைகளையே நம்மால் இழுத்து வர முடியாது, தலைவர்களை இழுத்து வர முடியுமா? இனி மீண்டும் வெல்லப்போவது பாஜக என்பதை உணர்ந்து அவர்களாகவே பாஜகவுக்கு வருகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications