தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? ரேஸில் இத்தனை பேரா.. "இவரை" டிக் அடிக்கிறாரா ஸ்டாலின்?
தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார், இந்த மாதத்துடன் இறையன்பு ஓய்வு
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இம்மாதம் 28ஆம் தேதி முதல் விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் அரசு இயந்திரத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். அப்போது தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனை மாற்றிவிட்டு இறையன்பை தலைமைச் செயலாளராக நியமித்தார்.
இதன் பிறகு முதல்வரின் தனி செயலாளர்களாக டி. உதயசந்திரன் ஐஏஎஸ், அனு ஜார்ஜ், சண்முகம் உள்ளிட்டோரை நியமித்தார். பின்னர் டிஜிபியாக இருந்த திரிபாதி ஓய்வு பெற்றதை அடுத்து புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார்.

தலைமைச் செயலாளர்
இந்த நிலையில் தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு இந்த மாதத்துடன் ஓய்வு பெற போகிறார். இதனால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமைச் செயலாளர் என்றால் சைரன் வச்ச காரில் பயணிப்பதும் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளை பார்ப்பதும் என்ற டிரென்டை மாற்றியவர் இறையன்பு.

கொரோனா பணிகள்
பல முறை சாலை பணிகள், கொரோனா பணிகள், மழை வெள்ள பணிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்துள்ளார். அதுவும் களத்திற்கே வந்து ஆய்வு செய்திருந்தார். சாலைப் பணிகளை ஆய்வு செய்த போது சாலைகளை உயர்த்தி போட வேண்டும். பழைய சாலைகளை தோண்டி விட்டு அதன் மேல் புதிய சாலைகளை போட வேண்டும். பழைய சாலைகளின் மேலே அப்படியே புதிய சாலைகளை போட கூடாது என்ற அறிவுரையெல்லாம் வழங்கினார்.

வெள்ள நிவாரண பணிகள்
அது போல் கொரோனா காலம், வெள்ள நிவாரண பணிகளின் போதும் மீட்பு மணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறதா என பார்வையிட்டார். மேலும் தன்னை பார்க்க வரும் போது யாரும் சால்வை, பூங்கொத்துகளை வாங்கிக் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார். தன்னுடைய புத்தகங்களை வாங்கிக் கொள்ளுமாறு எந்த ஒரு பள்ளியையும் அரசு அலுவலகத்தையும் வற்புறுத்த கூடாது என கண்டிப்புடன் இருந்தார்.

தமிழக அரசு
இதனால் இவரை விடுவதற்கு தமிழக அரசுக்கு மனம் இல்லை என தெரிகிறது. இதனால் இவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கலாமா என்ற யோசனையில் உள்ளனராம். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு கொடுத்ததற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதையே இப்போது செய்தால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பர். நாடாளுமன்றத் தேர்தல் வேறு வரவிருக்கிறது. இந்த நேரத்தில் தலைமைச் செயலாளர் பணி என்பது முக்கியம் என்பதால் அரசு யோசிக்கிறதாம்.

இறையன்பு
இது ஒரு புறம் இருக்க, இறையன்பு இடத்திற்கு வருவதற்கு பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம், அடுத்த தலைமைச் செயலாளராக முருகானந்தம், சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன், ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே. பிரபாகர் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றனவாம். இவர்களில் சிவதாஸ் மீனாவுக்குத்தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

யார் இந்த சிவதாஸ் மீனா
இவர் மூத்த அதிகாரி. இவர் 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். ஜெயப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜீனியரிங் படித்தவர். இதையடுத்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின 4 தனி செயலாளர்களில் ஒருவராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது சிவதாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் சிவதாஸ் மீனா மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் ஸ்டாலினின் குட்வில் புக்கில் இடம்பெற்றுள்ளார். எனவே இவருக்கே தலைமைச் செயலாளருக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications