ராஜ்யசபா ரேஸில் வெல்வாரா சீனியர் ப.சிதம்பரம்? திமுகவிடம் போராடி காங். வாங்கின ஒரு சீட் யாருக்கு?
சென்னை: திமுகவிடம் காங்கிரஸ் கட்சி எப்படியோ போராடி ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டை வாங்கிவிட்டது. இப்போது அந்த ஒற்றை ராஜ்யசபா சீட் யாருக்கு கிடைக்கப் போகிறது? என்பதுதான் காங்கிரஸில் ஆகப் பெரும் கேள்வி.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்கள் பதவி காலம் முடிவடைகிறது. இந்த பதவி இடங்களுக்கு ஜூன் 10-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வரும் 24-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ளது.
ராஜ்யசபா எம்.பிக்கள், சட்டசபை எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக அணிக்கு மொத்தம் 4 ராஜ்யசபா எம்.பிக்களும் அதிமுக அணிக்கு 2 எம்.பிக்களும் கிடைப்பர்.
இதனையடுத்து திமுக அணியில் திமுக 3 ராஜ்யசபா எம்.பி. இடங்களை வைத்துக் கொண்டு காங்கிரஸுக்கு ஒரு இடம் என திடீரென அறிவித்தது. திமுகவின் இந்த திடீர் அறிவிப்பு காரணமே காங்கிரஸை காரணம் காட்டி இடதுசாரிகளும் ஒரு சீட் கேட்டு நெருக்கடி தருவார்கள் என்பதால்தான் என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.

காங்.க்கு ஒரு சீட்
தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் உறுதியாகி விட்டது. ஆனால் இந்த ஒரு சீட்டை பெறப் போகிறவர் யார் என்பதுதான் காங்கிரஸில் பெரும் கேள்வியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருப்பவர் கே.எஸ்.அழகிரி. ஏற்கனவே தமக்குப் பின்னால் பெண் ஒருவர்தான் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் என பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார் அழகிரி. அனேகமாக கரூர் லோக்சபா தொகுதி எம்.பி. ஜோதிமணிக்குதான் மாநில தலைவர் வாய்ப்பு கிடைக்கும் என்பது தொடர் பேசுபொருள்.

போராடும் அழகிரி
இதனால் எப்படியாவது லைம் லைட்டில் இருக்க ராஜ்யசபா எம்.பி.யாகிவிடலாம் என்பது கே.எஸ்.அழகிரியின் கணக்கு. இதற்காகவே திமுகவுடன் திடீர் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார்; திடீரென திமுகவை முந்திக் கொண்டு திமுகவுக்கு நியாயம் கேட்டு போராட்டமெல்லாம் நடத்தினார் கே.எஸ்.அழகிரி. ஆனால் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவாக எந்த கிரீன் சிக்னலுமே இதுவரையும் வரவில்லையாம்.

காங். சிதம்பரம்
அதேநேரத்தில் இந்த ராஜ்யசபா ரேஸில் அமைதியாக காய்கள் நகர்த்தப்படுவது ப.சிதம்பரம் தரப்பில் இருந்து என்கின்றன தகவல்கள். அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் தமது குடும்பத்துடன் சந்தித்து பேசியது முதலே இந்த கருத்து உலா வருகிறது. 2016-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டவர் ப.சிதம்பரம். தற்போது அவரது பதவி காலம் முடிவடைகிறது. காங்கிரஸ் கட்சியோ இன்னொரு பக்கம் மறுசீரமைப்பில் படுமும்முரமாக இருக்கிறது. இந்த மறுசீரமைப்பு பணிகளில் ப.சிதம்பரம் சீனியர் என்பதால் மிக மிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. இதனால் ப.சிதம்பரத்துக்கு ராஜ்யசபா சீட்டை கொடுக்கலாம் காங்கிரஸ் மேலிடம் எனவும் கூறப்படுகிறது.

காங். மேலிடம் க்ரீன் சிக்னல்?
இன்னொரு பக்கம், காங்கிரஸில் ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி என்கிற முழக்கத்தையும் ராகுல் காந்தி முன்வைக்கிறார். அப்படிப்பார்த்தால் கார்த்தி சிதம்பரம் லோக்சபா எம்.பி.யாக உள்ளார்; அதனால் ப.சிதம்பரத்துக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி என்பது யோசனைதான்.. அது எல்லாம் நடைமுறைக்கு வரும்போது பார்த்து கொள்ளும் காங். மேலிடம். இப்போதைக்கு ப.சிதம்பரத்துக்குதான் காங். மேலிடம் ராஜ்யசபா சீட் தரும் என அடித்துச் சொல்கின்றன கதர்வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications