தமிழ்நாட்டில் வெங்காயப் பதுக்கலில்.. யார் ஈடுபட்டாலும் தப்பிக்க முடியாது.. செல்லூர் ராஜு எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில், வெங்காயப் பதுக்கலில் ஈடுபடும் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து, ஒருபோதும் தப்பிக்க முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ 120 ரூபாய் வரை சின்ன வெங்காயம் விற்பனை ஆகிறது. பெரிய வெங்காயத்தின் விலையும் மிக அதிகமாக உள்ளது.
எந்த குழம்பு வைப்பதற்கும் வெங்காயம் தேவை என்பதால் மக்கள் வெங்காய விலை உயர்வால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது டுவிட்டரில் , வெங்காய விற்பனை தொடர்பாக அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், மொத்த விற்பனைக் கடைகளில், 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என்று கூறியுள்ள அவர், வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில், கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.