Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொல்லுங்க.. நீங்க யாரு?.. மாணிக்கமா.. பாட்ஷாவா..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பெயர்ச்சி முடிஞ்சா வாழ்க்கை கும்முனு ஆயிடும்னு சொன்னானுங்க.. ஆனா அதேமாதிரி கம்முனு தானே இருக்குன்னு கேட்கத் தோணுதா? நானும் என் பங்குக்கு பெருசா எதையாவது செஞ்சுகிட்டே தான் இருக்கேன், ஆனா ஒரு பயலும் மதிக்க மாட்டேன்றானுங்களே ஏன்னு கேள்வி வருதா? ஆமாங்க ஆமா.. அப்படின்னா நீங்க தான் இதை கண்டிப்பா படிக்கணும்.

விஷயத்துக்கு போறதுக்கு முன்னாடி, உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா... ஒரு ஜூவுல ஒரு சிங்கம் இருந்துச்சாம். அந்த உயிரியல் பூங்காவில இருக்குற எல்லா மிருகத்தையும் விட தான்தான் பெரிய பலசாலி, அழகான, கம்பீரமான மிருகம்னு அதுக்கு எப்பவுமே ஒரு நினைப்பு. அதனால பிடரி மயிரை சிலுப்பிக்கிட்டே தான் திரியுமாம். ஒருநாள் அமெரிக்க அரசாங்கத்தோட ஒரு ஒப்பந்தம் செஞ்சுகிட்ட இந்திய அரசு அந்த சிங்கத்தை அமெரிக்காவில இருக்கிற ஜூவுக்கு அனுப்பிடுச்சாம். சிங்கத்துக்கு பெருமை பிடிபடலை. ஏய், நான் அமெரிக்கா போறேன்.. அமெரிக்கா போறேன்னு மத்த மிருகங்கள்கிட்ட எல்லாம் பந்தா பண்ணிட்டு பிளைட் ஏறிடுச்சு.

விமானத்துல ஏறினதும் அந்த சிங்கத்துக்கு சாப்பிட வாழைப்பழம் கொடுத்தாங்களாம். என்னடா இது, நமக்கு வாழைப்பழம் தர்ரானுங்க.. ஒருவேளை டிராவல்ல வயிறு அப்செட் ஆகக் கூடாதுன்னு கொடுக்குறாங்க போல இருக்கு.. ஃபன்னி கய்ஸ்னு மனுசுல நினைச்சுகிட்டு அந்த வாழைப்பழத்தை லபக்குனு வாய்ல போட்டுகிச்சாம். அமெரிக்கா போற வரைக்கும் வாழைப்பழம் தான் உணவாம். சிங்கத்தால முடியல.. இருந்தாலும் பொறுத்துகிட்டு சாப்பிட்டிருச்சு.
ஒருவழியா அமெரிக்காவில இருக்கிற ஜூவுல கொண்டு போய் ஒரு பெரிய கூண்டுல விட்டுட்டாங்களாம்.

சிங்கத்துக்கு பனானா

சிங்கத்துக்கு பனானா

அன்னைக்கு சாப்பாடு கொடுக்க வந்த ஆளு, மறுபடியும் சிங்கத்துக்கு கூடை நிறைய வாழைப்பழம் கொடுத்தாராம். அடக்கடவுளே, இது என்னடா ரோதணையா போச்சுன்னு நினைச்ச சிங்கம் சரின்னு பல்லைக் கடிச்சுட்டு அதையும் சாப்பிட்டுருச்சாம். ஒருவேளை கிளைமேட் ஒத்துக்குற வரைக்கும் லைட் ஃபுட் இருக்கட்டும்ன்னு நினைக்கிறாங்க போலன்னு அதுவே சமாதானமும் சொல்லிகிச்சாம். அடுத்த நாளும் வாழைப்பழம்தான் சாப்பாடு. அதுக்கு அடுத்த நாளும் அதே வாழைப்பழம் டயட்தான். சிங்கத்தால அதுக்குமேல பொறுத்துக்க முடியல.

எடுபட்ட பயலே.. நான் சிங்கமடா!

எடுபட்ட பயலே.. நான் சிங்கமடா!

அடுத்த நாள் வாழைப்பழக் கூடை எடுத்துட்டு வந்த ஆளை, பாய்ஞ்சு சட்டையை பிடிச்சிருச்சாம். ஏண்டா எடுபட்ட பயலே, நான் சிங்கம்டா, காட்டுக்கே ராஜா, என்னைப் பார்த்தா எல்லா மிருகமும் துண்ட காணோம், துணியை காணோம்னு ஓடும். கொஞ்சம்கூட பயம் இல்லாம தினமும் வாழைப்பழத்தை தூக்கிக்கிட்டு வந்தா என்னடா அர்த்தம்னு ஓங்கி சவுண்டு விட்டாராம் சிங்க ராஜா. ஆனா அந்த ஆளு இதுக்கெல்லாம் அசரவே இல்லையாம். இதோ பாரு, நீ யாரா வேணா இருந்துட்டு போ. ஆனா உன் பேர்ல இருக்கிற பார் கோட்ல நீ குரங்குன்னுதான் போட்டிருக்கு. அதனால உனக்கு குரங்கு டயட்தான் குடுக்க முடியும்னு சிம்பிளா சொல்லிட்டு போயிட்டே இருந்தாராம்.

என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ

என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ

இதேதான் நமக்கும் அடக்கடி நடக்குது. நீங்க உங்களை சிங்கம்னு நினைச்சிக்கலாம். ஆனா இந்த உலகம் உங்களை குரங்குன்னு நினைச்சா, உங்களை குரங்கு மாதிரிதான் நடத்தும். நம்ம எல்லார் நெத்திலேயும் கண்ணுக்குத் தெரியாத லேபிள் ஒண்ணு ஒட்டியிருக்கு. நம்ம கூட பழகுற எல்லார் கண்ணுக்கும் அது தெரியும். ஆனா தீவிரமா முயற்சி பண்ணி பார்த்தா மட்டும்தான் நம்மால அந்த லேபிளை பார்க்க முடியும். ஏன்யா போட்டு குழப்புற, கொஞ்சம் புரியுற மாதிரி தெளிவாதான் சொல்லேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

டைமிங் முக்கியம்

டைமிங் முக்கியம்

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இடத்திற்கு 10 மணிக்கு வருவதாக சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் 10.20 மணிக்குதான் போறீங்கன்னா, முதலில் யாரும் பெரிசா தப்பா எடுத்துக்க மாட்டாங்க. அதேசமயம் எப்பவுமே நீங்க சொன்ன நேரத்தை விட அரைமணி நேரம், ஒருமணி நேரம் தாமதமாதான் போவீங்கன்னா இந்த உலகம் அதை நோட் பண்ணி வெச்சிக்கும். நீங்க அடுத்த முறை யாரிடமாவது இத்தனை மணிக்கு வர்ரேன்னு சொன்னா, அவங்க அதை சீரியசா எடுத்துக்க மாட்டாங்க. நீங்க 10.20க்கு போனா, அவங்க 10.30க்கு வருவாங்க.

எல்லாம் பொருந்தும்

எல்லாம் பொருந்தும்

நாம் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும் இது பொருந்தும். ஒரு விஷயத்தை செய்ய முடிஞ்சாதான் ஒத்துக்கணும். சும்மாவே அதெல்லாம் பின்னிடலாம், ஜமாய்ச்சுபுடலாம் என்று வாய்ஜாலம் காட்டி விட்டு காரியத்தில் கோட்டைவிட்டால் அப்புறம் உங்கள் பேச்சுக்கு எந்த மரியாதையும் இருக்காது. இப்படி நம்முடைய ஒவ்வொரு சொல்லும், செயலும்தான் நாம் யார் என்பதை தீர்மானிக்கும். நீங்க சொன்ன சொல்லை நீங்க மறந்துடலாம், ஆனா இந்த உலகம் மறக்காது. இதை எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்துதான் நீங்க சிங்கமா, குரங்கா.. உங்களுக்கு என்ன டயட் என்பதை இந்த உலகம் முடிவு பண்ணுது.
நாம அடுத்தவர்களை பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு எவ்வளவு மெனக்கெடறோம்.

தீர விசாரிப்போம்

தீர விசாரிப்போம்

ஒருத்தர் கூட தொழில் பண்றதுக்கு முன்னாடியோ, சம்பந்தம் பண்றதுக்கு முன்னாடியோ நாலு இடத்துல தீர விசாரிச்சுட்டுதானே ஒரு முடிவுக்கு வர்ரோம். ஆனா இப்படி அடுத்தவங்களை பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு காட்டுற அக்கறையில கால் பங்காவது நம்மை பத்தி நாமே தெரிஞ்சிக்க காண்பிக்கணும்னு சொல்றாங்க. அட ஆமாங்க, நாம யாருன்னு நாமளே கேட்டுப் பார்க்கணுமாம். இப்படி கேட்க ஆரம்பிச்சா, நம்ம பத்தி இதுவரை நமக்கே தெரியாத பல விஷயங்கள் தெரிய வரும்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க.

காத்தில் விடுவது

காத்தில் விடுவது

சொன்ன சொல்லை காப்பாத்தாம காத்துல விடுறது, சுயநலமாவே சிந்திக்கிறது, அடுத்தவன் வளர்ச்சியில கட்டையை தூக்கி போடுறதுன்னு இருந்தா இதை எல்லாம் கவனிச்சு அடுத்தவர்கள் நம்மை பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள். இதுகூட பெரிய பிரச்னை இல்லை. ஆனா இதை எல்லாம் தூக்கி சாப்பிடுற ஒரு பெரிய ஆபத்து இருக்குதாம். அது என்ன தெரியுமா? அடுத்தவர்கள் எப்படி நம்மை எடை போடுறாங்களோ.. அதேமாதிரி நம்ம ஆழ்மனசும் நம்மை தொடர்ந்து எடை போட்டுகிட்டே இருக்குமாம்.

சொன்ன சொல்லுக்கு மரியாதை

சொன்ன சொல்லுக்கு மரியாதை

நாம சொன்ன சொல்லுக்கு நாமே மரியாதை கொடுக்கலைன்னா, அடுத்த முறை நாம சீரியஸா எதையாவது செய்யனும்னு நினைக்கும்போது, ஆழ்மனசு அதை சீரியஸா எடுத்துக்காதாம். அட இந்த ஆளு, எப்பவுமே இப்படித்தான்பா. சும்மா வாயில வடை சுடுவாப்புல, ஆனா செயல்ல ஒண்ணும் இருக்காதுன்னு முடிவு பண்ணி ஆழ்மனசு நமக்கு ஒத்துழைப்பு கொடுக்காம அதுபாட்டுக்கு ஹாயா இருக்குமாம். இது அப்படியே நம்ம மூளையையும் பாதிக்குமாம். ப்ரோ, ஃப்ரீயா விடு, இந்த பார்ட்டி இப்படியே பேசிகிட்டேதான் இருப்பான், வேலையில இறங்கவே மாட்டான்னு ஆழ்மனசு மூளைக்கு சிக்னல் கொடுத்துடுமாம். இதனால ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்கான உத்வேகமும், செயல்திட்டமும் நமக்கு தோன்றதே சிக்கலாகிடுமாம்.

மாணிக்கமா

மாணிக்கமா

அதனால நீங்க பாட்ஷாவா, மாணிக்கமா என்பதை முதலில் உங்க ஆழ்மனசுக்கு தெளிவுபடுத்தணும். அம்பி, அந்நியன், ரெமோன்னு மாறி மாறி பெர்ஃபாமன்ஸ் பண்ணீங்கன்னா உங்க ஆழ்மனசு ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகி சேது விக்ரம் மாதிரி ஆகிடும். சரி, என்ன பண்ணனும்னு சொல்லுப்பா என்பவர்களுக்கு... உங்களின் எண்ணங்களையும், வார்த்தைகளையும் செயல்களாக்க முழு முயற்சி பண்ணுங்க. காலையில 6 மணியோ, 7 மணியோ.. நீங்க ஒரு டைம் செட் பண்ணா அந்த டைமுக்கு கண்டிப்பா எழுந்துக்கணும். இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் உங்களின் வார்த்தைக்கு நீங்களே மரியாதை கொடுக்கணும். இதை மற்ற எல்லா விஷயங்களிலும் கடைப்பிடிக்க ஆரம்பிச்சா, ஆழ்மனசு உங்களை மதிக்க ஆரம்பிக்கும். ஆழ்மனசு கிட்டேருந்து மரியாதை கிடைக்க ஆரம்பிச்சிட்டா, இந்த உலகமும் உங்களை மதிக்க ஆரம்பிச்சுடும்.

அவ்வளவுதான் சிம்பிள், ஆல் தி பெஸ்ட்.

- கௌதம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+