அதிமுக ஓட்டு பாமகவுக்கு கிடைக்காதது ஏன்? திமுகவுக்கு சென்றது எப்படி? விக்கிரவாண்டி தேர்தல் பின்னணி
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் ரிசல்ட் இன்று வெளியானது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 2ம் இடம் பிடித்துள்ளது. அதிமுக போட்டியிடாத நிலையில் அதன் ஓட்டுகள் பாமகவுக்கு கிடைக்கவில்லை. மாறாக திமுக பக்கம் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக திமுகவின் புகழேந்தி இருந்தார். இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக சி அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா போட்டியிட்டனர்.

இவர்கள் உள்பட மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக களமிறங்கினர். இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. கடந்த 10ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் மொத்தம் 82.9 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இதையடுத்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். மொத்தம் 20 சுற்றுகளாக நடந்த ஓட்டு எண்ணிக்கை அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.
அன்னியூர் சிவா மொத்தம் 1,23,688 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாமக வேட்பாளர் சி அன்புமணியை விட அவர் 67,440 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றார். இந்த தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா டெபாசிட் இழந்தார். அவர் வெறும் 10,520 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 27 பேர் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில் தான் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில் அவர்களின் ஓட்டு என்பது திமுகவின் வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மாறாக பாமக வேட்பாளர் சி அன்புமணி மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆகியோருக்கு கிடைக்கவில்லை. அதாவது லோக்சபா தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அதிமுக கூட்டணியில் பாமக இணையவில்லை. இது அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது முதல் காரணமாகும்.
2வது காரணம் என்னவென்றால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் பாஜக கூட்டணியில் உள்ளனர். இப்படி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை அரவணைக்கும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு அதிமுகவினர் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேவேளையில் பாஜக கூட்டணியில் பாமக அங்கு போட்டியிட்டது. மேலும் அண்ணாமலையும் பாமக வேட்பாளர் சி அன்புமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இதனால் வேறு வழியின்றி அதிமுகவினர் பாமகவுக்கு பதில் திமுகவுக்கு ஓட்டளித்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications