இதுதான் கண்ணியமா?.. ஒரேநாளில் 10 பேருக்கு செக்.. களையெடுப்பை தொடங்கிய இபிஎஸ்.. வலுவான மெசேஜ்!
சென்னை: ஒரு பக்கம் அதிமுகவை கைப்பற்ற சசிகலா தீவிரமாக முயன்று வருகிறார், இன்னொரு பக்கம் அதிமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும் முயன்று வருகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில்தான் அதிமுகவில் அடுத்தகட்ட களையெடுப்பை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி உள்ளார்.
அதிமுகவில் இருக்கும் தென் மண்டல நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. முன்னாள் அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து மேலும் சில நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின.
நேற்றும் கூட நமது தளத்தில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தோம். அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக நிர்வாகிகள் பலர் திமுகவிற்கு செல்வதை விரும்புவதாக தென்மண்டல வட்டாரங்கள் தெரிவித்தன.

வேறு என்ன காரணம்
அதேபோல் வன்னியர் இடஒதுக்கீடு காரணமாகத்தான் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாகவும் தென்மண்டல அதிமுக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை சுட்டிக்காட்டி இவர்கள் திமுக பக்கம் செல்லும் திட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஒரு பக்கம் தென் மண்டலத்தில் திமுக அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலாவும் தென்மண்டல அதிமுக மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ஆதரவு போஸ்டர்
இதனால்தான் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் தென்மண்டலத்தில் அதிகமாக ஒட்டப்படுகிறது. அதோடு சசிகலாவிடம் போனில் பேசும் முக்கிய நிர்வாகிகள் பலர் தென் மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்மண்டல அதிமுகவை திமுக, சசிகலா என்று இரண்டு தரப்பும் குறி வைத்துள்ள நிலையில்தான், தற்போது அதிமுகவில் அடுத்தகட்ட களையெடுப்பை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி உள்ளார்.

நீக்கம்
அதன்படி, தென்மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக கருதப்பட்ட 10 பேரை கட்சியின் ஒருங்கிணையாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீக்கி உள்ளனர். கன்னியாகுமரியில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.ராஜன், மாடசாமி, தென்கரை மகராஜன், மோசஸ் ராமச்சந்திரன், டோமினிக், வரதராஜன் பாலசுப்பிரமணியன், ஜெயந்தி, லதா ராமச்சந்திரன், கிருஷ்ணகுமார், நாஞ்சில் ஆகிய 10 பேர் ஒரே நாளில் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர்.

கோபம்
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்று கருதப்பட்ட இவர்கள் மொத்தமாக ஒரே நாளில் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கண்ணியமாக செயல்படவில்லை, கட்சியில் நிலவும் பூசலை பயன்படுத்தி கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி நீக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.ராஜன், டோமினிக், வரதராஜன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது இபிஎஸ் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் கட்சிக்கு கண்ணியமாக, நேர்மையாக செயல்படவில்லை என்று நேற்று வெளியிடப்பட்ட அதிமுக அறிக்கையிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீக்கம்
நீக்கப்பட்ட 10 பேரில் சிலர் சசிகலாவுடன் தொடர்பில் இருந்ததாகவும், சிலர் திமுக தரப்புடன் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக தலைமைக்கு தகவல் சென்ற நிலையிலேயே உடனே 10 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியில் சசிகலா அல்லது திமுகவுடன் யார் பேசினாலும் அவர்களுக்கும் இதே நிலைதான் என்று சக நிர்வாகிகளுக்கு வலுவான மெசேஜ் அனுப்பும் வகையில் இந்த நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications