டாலரை தூக்கி வீசும் உலக நாடுகள்.. ஒரே நேரத்தில் தங்கத்தை வாங்கி குவிக்க என்ன காரணம்! முக்கிய தகவல்
சென்னை: இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உயர்ந்து வருகிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தை வாங்குவதே இதற்குப் பிரதானக் காரணமாகும். எல்லா உலக நாடுகளும் சொல்லி வைத்தார் போலத் தங்கத்தை வாங்கி குவிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்தாலும், இந்தாண்டு தொடக்கம் முதலே அது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதற்குப் பிரதானக் காரணமே உலக நாடுகள் தங்கத்தை வாங்குவது தான். அதாவது பொதுமக்களை போலப் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் கூட தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. உண்மையில் இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

பொருளாதாரச் சூழல்
புவிசார் அரசியல் மாற்றங்கள், கணிக்க முடியாத கடன் பத்திர வருவாய் மற்றும் சீரற்ற பொருளாதார வளர்ச்சி என உலகெங்கும் பல மாற்றங்கள் நடப்பதால் உலக நாடுகள் தங்கத்தை நோக்கித் திரும்பியுள்ளன. இந்த மாற்றத்தைப் பொருளாதார வல்லுநர்கள் structural volatility எனக் குறிப்பிடுகிறார்கள். உலகின் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2%க்கு கீழ் இருக்கும் இருக்கிறது. அதேபோல வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட போதிலும் பணவீக்கம் குறையாமல் இருக்கிறது. இதுபோன்ற சூழல்களில் கடன் பத்திரங்கள் மூலம் நிலையான வருவாய் கிடைக்காது.
தங்கத்தை வாங்கி குவிக்கும் உலக நாடுகள்
இதுபோன்ற நம்பிக்கையில்லாத சூழலில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் எப்போதும் நாடுவது தங்கத்தை தான். எந்தவொரு கடன் பத்திரம் அல்லது வெளிநாட்டு கரன்சி போலத் தங்கத்திற்கு எந்தவொரு ஆபத்தும் இருக்காது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ரூபாய் மதிப்பு ஒவ்வொரு நாளும் ஏறும் குறையும்.. ஆனால், தங்கத்தின் மதிப்பு ஒருபோதும் மதிப்பிழக்காது, பணவீக்கத்தால் பலவீனமடையாது அல்லது பொருளாதாரத் தடைகளால் முடக்கப்படாது. இதுவே தங்கத்தை மீண்டும் ஒரு நம்பிக்கைக்குரிய முதலீடாக மாற்றுகிறது.
உலக நாடுகள்
இது தொடர்பாக இன்ஃபார்மெரிக்ஸ் ரேட்டிங்ஸின் தலைமைப் பொருளாதார நிபுணர் மனோரஞ்சன் ஷர்மா கூறுகையில், "ஒரு பாதுகாப்பான புகலிடம் வேண்டும் என்றே மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். டாலருக்கு பதிலாக வேறு ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகவே உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. குறிப்பாகச் சீனா, இந்தியா, ரஷ்யா, துருக்கி மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகள் தங்கத்தை அதிகளவில் வாங்குகின்றன
தங்கத்தை வைத்திருப்பது பொருளாதாரக் குழப்பங்களில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது. நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும், இதுபோன்ற குழப்பமான பொருளாதாரச் சூழல் நிலவும்போது ஒரு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இதுவே உலக நாடுகள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்யப் பிரதானக் காரணமாக உள்ளது" என்றார்.
அதிகரிக்கும் தங்கக் கையிருப்பு
நடப்பாண்டில் எல்லா நாடுகளின் மத்திய வங்கிகளும் சேர்ந்து சுமார் 900 டன் தங்கத்தை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சராசரியை விட அதிகமாகும். கடந்த 4 ஆண்டுகளாகவே உலக நாடுகள் சராசரியை விட அதிகளவிலேயே தங்கத்தை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உலக தங்கக் கவுன்சிலும் கூட சமீபத்தில் இது தொடர்பாக ஒரு ரிப்போர்ட்டை வெளியிட்டது. அதில் 76% மத்திய வங்கிகள் அடுத்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் முதலீட்டை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சுமார் 73% வங்கிகள் அமெரிக்க டாலரின் பங்கு குறையும் என்று கணித்துள்ளன. இப்போது உலக நாடுகளின் கையிருப்பில் சுமார் 58% டாலராக இருக்கிறது. ஆனால், இந்தப் பங்கு தொடர்ந்து குறைந்தே வருகிறது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் உலக நாடுகள் டாலர் மீதான முதலீட்டைக் குறைத்து அல்லது டாலரை விற்றுத் தங்கத்தை வாங்கி வருகிறது.
காரணம் இதுதான்
உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தபோது திடீரென ரஷ்யா வசம் இருந்த டாலரில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அமெரிக்கா முடக்கியது. எங்கு எதிர்காலத்தில் தங்களிடம் இருக்கும் டாலரையும் அமெரிக்கா இதுபோல முடக்குமோ என நினைத்தே உலக நாடுகள் டாலரை குறைத்துத் தங்கத்தை வாங்கி வருகின்றன. ஏனென்றால் தங்கம் இந்த வங்கி அமைப்புக்கு வெளியே உள்ளது. அதை உள்நாட்டில் சேமிக்கலாம், உலகளவில் வர்த்தகம் செய்யலாம். மேலும், குறிப்பிட்ட நாட்டை நம்பி இருக்காது.
இதுபோன்ற காரணங்களாலேயே உலக நாடுகள் இதுவரை அல்லாத வேகத்தில் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. அதன் விலை அதிகரிக்கவும் இதுவே பிரதானக் காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications