சீனில் வந்த உதயநிதி.. "ரெட்டி" ஏன் ஸ்டாலினை சந்தித்தார்.. ஆந்திர "விஐபி"தான் காரணமா.. பரபர திமுக..!
சேகர் ரெட்டி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்
சென்னை: கொரோனா பிரச்சனை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தால், திமுகவுக்குள் வேறு சில சமாச்சாரங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன.. அதிலும் சேகர் ரெட்டி குறித்த செய்தி ஒன்று திமுக வட்டாரத்தையும் தாண்டி, அதிமுகவையும் உற்று நோக்க வைத்து வருகிறது..!
Recommended Video
ஜெ.சேகர் என்பவரை சேகர் ரெட்டி என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும்.. சேகர் ரெட்டி என்றதும் அடுத்து நம் கண் முன் வந்து நிற்கும் பெயர் ஓபிஎஸ்..!
இவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் இருந்தது.. அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தியவர் இந்த ரெட்டிதான்..

ஜெயலலிதா
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது, சேகர் ரெட்டியின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிய வந்தது.. அதற்கேற்றார்போல, திருப்பதி வெங்கடாச்சலபதி கோவில் அறங்காவலராக தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டியும் அமர்த்தப்பட்டிருந்தார்..

ஓபிஎஸ்
ஓபிஎஸ் தலையில் மொட்டை போட்டுக்கொண்டு, ரெட்டியுடன் திருப்பதி கோவிலில் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவும் இன்னொரு பக்கம் வைரலானது. இந்த சூழலில் சேகர் ரெட்டியின் வீடுகளில் ரெயிடு நடந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வழக்கில் ரெட்டி கைதாகி, அப்போது அவரது டைரி ஒன்று சிக்கி, அந்த டைரியில் ஓபிஎஸ் பெயர் அடிபட்டு.. இப்படி ஒரே களேபரமாக அரசியல் களம் தகதகத்தது.

தண்டனை
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக ஆட்சிக்கு வந்தது.. யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ, அவர்ளின் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு, சட்ட ரீதியான தண்டனை தரப்படும் என்று ஸ்டாலின் பிரச்சாரங்களில் சொல்லி வந்தார்.. அப்போதே சேகர் ரெட்டியின் பெயரும் பலருக்கு ஞாபகம் வந்தது.. ஏனென்றால், சேகர் ரெட்டி மீதான வழக்கு என்னாச்சு என்று ஸ்டாலின்தான் கேள்வி எழுப்பி கொண்டிருந்தார்.

புகைச்சல்
இப்போது விஷயம் என்னவென்றால், ஸ்டாலினை சேகர் ரெட்டி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.. இதுதான் புகைச்சலை கிளப்பி உள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் தொழிலதிபர்கள், விஐபிக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.. அதன்படி, பல்வேறு தரப்பினரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கி வருகின்றனர்.. அந்த வகையில், ஸ்டாலினை சேகர் ரெட்டியும் ஒரு கோடி நிதி வழங்கினார்..

போட்டோ
இவர் நிதி வழங்கியது பிரச்சனை இல்லை.. யார் வேண்டுமானாலும் நிதி தரலாம்.. ஆனால், நன்கொடை வழங்கியபோது எடுக்கப்பட்ட போட்டோவில் உதயநிதி இடம்பெற்றிருந்தார்.. சேகர் ரெட்டி நிதி தந்தால், உதயநிதி ஏன் உடன் நிற்கிறார் என்ற ஆச்சரியம் பலருக்கு ஏற்பட்டது.. இந்த போட்டோவும் இணையத்தில் வைரலானது..!

திமுக தலைமை
இதுகுறித்த மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.. கடந்த 3 மாசத்துக்கு முன்பிருந்தே திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் சேகர் ரெட்டி கைகோத்துவிட்டாராம்... எனவே, மறுபடியும் மணல் ஒப்பந்தம் இவருக்கே தரப்படலாம் என்கிறார்கள்..

விஐபி
இதற்கெல்லாம் காரணம், ஆந்திரத்தின் டாப் விஐபி ஒருவர், திமுக மேலிடத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசியதுதானாம்.. அப்படின்னா, மணல் ஒப்பந்தம் மீண்டும் ரெட்டிக்கே தரப்படுமா? ஆந்திராவில் இருந்து பேசிய அந்த புள்ளி யார்? ரெட்டி மீது இருக்கும் வழக்குகள் அனைத்தும் அவ்வளவுதானா? என்ற சந்தேகங்களும் நம்மிடம் தொத்தி நிற்கின்றன.












Click it and Unblock the Notifications