"செங்கல் கூட..” அண்ணாமலை லுலு மால் மேட்டரில் “சைலண்ட்” ஆனது ஏன்? திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி
சென்னை: லுலு மால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என்று பேசிய அண்ணாமலையிடம், அமைதியான காரணம் என்ன என்று திமுக எம்பி செந்தில் குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். அங்கு தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர் தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்த்தார். அதில் குறிப்பாக லுலு இண்டெர்நேஷனல் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.

சர்வதேச அளவில் ஹைபர் மால்களை நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலிக்கு சொந்தமான லுலு குழுமம் கேரளாவின் கொச்சின் உட்பட உலகளவில் சுமார் 22 நாடுகளில் 230 க்கும் அதிகமான பிரம்மாண்ட ஹைபர் மால்களை நடத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் பெரிய மால்களை கட்ட இந்த குழுமம் திட்டமிட்டு இருக்கிறது.
அதன்படி தமிழ்நாட்டின் கோவையில் புதிய மால் ஒன்றை லுலு குழுமம் தொடங்க முடிவு செய்து இருக்கிறது. அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் லுலு ஹைபர் மால் தொடங்க எதிர்ப்பு தெரிவித்தார். சிறு வணிகர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறிய அவர், இந்த விவகாரத்தில் சிறுவணிகர்களுக்கு ஆதரவாக பாஜக இருக்கும் என்றார்.
லுலு மாலின் ஒரு செங்கல்லை கூட தமிழ்நாட்டில் வைக்க பாஜக அனுமதிக்காது எனவும் அவர் பேசினார். அண்ணாமலை இவ்வாறு கூறிய நிலையில் லூலு மாலின் கட்டுமானப் பணிகள் கடந்த ஓராண்டாக கோவையில் நடைபெற்று வந்தது. ஆனால், பாஜக தரப்பில் அந்த கட்டுமானப் பணிக்கு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.
ஓர் வருடத்திற்கு முன் தமிழகத்தில்
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 18, 2023
Lulu mall ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என்று வீர வசனம் பேசிய திரு.அண்ணாமலையிடம்
Lulu mall கோவையில் திறக்கப்பட்டுள்ள சூழலில்
அதற்க்கு பின் அதை பற்றி வாய் திறக்காத காரணம் என்ன என்று அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டு பதில் பெற்று தரவும்.
கோவை லட்சுமி மில் பகுதியில் லுலு மால் கட்டுமானப் பணிகள் தொடங்கி துரிதமாக நடைபெற்றன. கடந்த பிப்ரவரி மாதமே கோவை லுலு மாலின் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், அறிவிப்பு வெளியானபோது எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலையை அப்போது எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் லுலு ஹைபர் மார்க்கெட் கட்டுமான பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் லுலு ஹைபர் மார்க்கெட்டை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார்.
அப்போதும் அண்ணாமலை தரப்பிலோ, பாஜக தரப்பிலோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இதுபற்றி திமுக எம்பி செந்தில் குமார் ட்விட்டரில், "ஓர் வருடத்திற்கு முன் தமிழகத்தில் லுலு மால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என்று வீர வசனம் பேசிய திரு.அண்ணாமலையிடம் லுலு மால் கோவையில் திறக்கப்பட்டுள்ள சூழலில் அதற்க்கு பின் அதை பற்றி வாய் திறக்காத காரணம் என்ன என்று அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டு பதில் பெற்று தரவும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications