நிர்மலா டூ அண்ணாமலை.. எடப்பாடியை புகழ்ந்து தள்ளும் பாஜக தலைகள்.. பின்னணியில் விஜய்? என்னாச்சு?
சென்னை: கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியை பாஜகவினர் கடுமையாக புகழ்ந்தபடி உள்ளனர். முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமியின் மனதை குளிர வைக்க வேண்டும் என்று பாஜகவினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். அதேபோல் பாஜக - அதிமுக கூட்டணியில் ஒற்றுமை வேண்டும் என்று பாஜக டாப் தலைகள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இதற்கு பின் விஜய் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் பேச்சு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு அழைப்பு விடுத்தார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 30, 2025) சென்னையில் ஜி.கே. மூப்பனாரின் 24வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ஆகியோரும் உடனிருந்தனர்.
அவர் தனது உரையில், "கூட்டணியின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவ வேண்டும். சிறிய கருத்து வேறுபாடுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கூட்டணியில் முதிர்ச்சியடைந்த தலைவர்கள் உள்ளனர். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் உறுதியையும் ஒழுக்கத்தையும் நாம் கொண்டிருக்க வேண்டும். இதுதான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்" என்று வலியுறுத்தினார்.
மேலும், "2026 தமிழகத் தேர்தலில் ஒரு மாற்றத்திற்கான தேவை உள்ளது. இந்த மாற்றத்தை கொண்டு வரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நாம் அனைவரும் ஒரு கூட்டணியாக ஒன்றிணைந்து இந்த இலக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழக குடிமக்கள் இதைக் கேட்கிறார்கள். போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் அவர்களது குடும்பங்களை அழிப்பதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்" என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
நயினார் நாகேந்திரன் பேச்சு
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறிய நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரப்படுவாரா என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், எங்களது கூட்டணி கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்த பின் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதுதான். யாரும் மன வருத்தத்தில் இல்லை. இனி பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வருவார்கள். எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று கூறி உள்ளார்.
எடப்பாடி குறித்து அண்ணாமலை
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: "அண்ணாமலை இந்தக் கட்சியின் ஒரு தொண்டன். சாதாரண தொண்டனாக இருப்பதில் எனக்கு பெருமை. கட்சியில் எங்களுக்குள் 1,008 விஷயங்கள் இருக்கலாம். 2026 தேர்தலில் இப்படி செல்லலாம், 2031 அப்படி செல்லலாம் என்று எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தலைவர்கள் ஒருங்கிணைந்து 2026 தேர்தலுக்கு இப்படித்தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று சென்னையில நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறிவிட்டோம். அதன் பிறகு அதை பின்பற்றுவது கட்சிக்கு நல்லது. அதன்படி நான் செல்கிறேன்.
சமீபத்தில் தமிழ்நாடு வந்த அமித் ஷாவும் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக கூறினார். இப்படி கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் கடுமையாக புகழ்ந்தபடி உள்ளனர். முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமியின் மனதை குளிர வைக்க வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகின்றனர்.
அமித் ஷா அனுப்பிய மெசேஜ்
அதிமுக உடன் மோதல் போக்கு வேண்டாம், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா அதிமுக தலைவர்களுக்கு மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. விஜய் பற்றி அமித் ஷாவிற்கு கிடைத்த தகவல் ஒன்றே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விஜய் அதிமுக உடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வருகிறார். எடப்பாடி பழனிசாமியை இப்போது பகைத்தால், அவர் கூட்டணியை விட்டு கழன்று கொள்வார். தவெக கூட்டணிக்கு செல்வார். விஜய் இதற்கு தீவிரமாக முயல்கிறார். எடப்பாடிக்கு தேவையானதை நாம் கொடுக்கவில்லை என்றால்.. எடப்பாடி பழனிசாமியை இப்போது பகைத்தால் அவர் தவெக கூட்டணிக்கு போகும் வாய்ப்புகள் உள்ளன என்று அமித் ஷா எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்தே பாஜகவினரான நயினார் நாகேந்திரன், அண்ணாமலை வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications