ஆஞ்சியோபிஸாஸ்டி இல்லை.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை ஏன்? பின்னணி காரணம்
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு பிறகு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு பதில் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு நிலையில் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். சமீபத்தில் இவரது சகோதரர் அசோக், உறவினர்கள் நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.

இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் கரூரில் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, சென்னை வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகம், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்பட 8 இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் 10 மணிநேரத்துக்கும் அதிகமாக நீடித்தது.
செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகத்தில் 17 மணிநேரம் சோதனை நடந்து முடிந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நெஞ்சுவலி எனக்கூறி அவர் துடித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் என ஏராளமானவர்கள் சென்று அவரை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையே தான் செந்தில் பாலஜிக்கு இதயத்துக்கும் ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு இருக்கலாம். இதுதான் நெஞ்சுவலிக்கு காரணமாக இருக்கலாம் என டாக்டர்கள் நினைத்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆஞ்சியோகிராம் என்பது இதயத்துக்கு ரத்தம் முறையாக செல்கிறதா? என்பதை அறியும் வகையில் இதயத்துக்கு ரத்தம் எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் எனும் குழாய்களில் இருக்கும் அடைப்புகளை கண்டறியும் பரிசோதனையாகும். இந்த பரிசோதனையின்போது செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதனை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையும் உறுதி செய்தது.
இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய ரத்த நாள பரிசோதனை இன்று காலை 10.40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனைகளில் மூன்று முக்கியமான இரத்த குழா்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது'' என கூறப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கரூரில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகாலா சென்னை வந்திருந்தார். அவர் அறுவை சிகிச்சை செய்ய ஒப்புதல் அளித்தாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதா? அல்லது வேறு மருத்துவமனைக்கு அவர் மாற்றம் செய்யப்படுகிறாரா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதற்கிடையே தான் பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் என்ன? எதற்காக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பது பற்றி பலரும் அறியாத நிலை உள்ளது. அதாவது பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது இதயத்துக்கான ரத்த ஓட்டம் சீராக கிடைப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஆபரேஷன் ஆகும். அதாவது உடலில் இருந்து இதயத்துக்கு பல்வேறு ரத்த நாளங்கள் எனும் குழாய்கள் மூலம் ரத்தங்கள் செல்லும். இந்த ரத்த குழாய்களில் கொழுப்புகள், வீக்கம், தொற்று ஏதாவது சேர்ந்தால் அடைப்புகள் ஏற்படும். இதனால் இதயத்துக்கான ரத்தம் ஓட்டம் தடைப்படும். இதனால் நெஞ்சுவலி ஏற்படலாம்.
பொதுவாக இதயத்துக்கான ரத்த குழாய்களில் அடைப்புகள் இருப்பதை கண்டுப்பிடிக்க ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படும். இது செந்தில் பாலாஜிக்கும் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 அடைப்புகள் வரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஆஞ்சியோபிளாஸ்டி எனும் ஸ்டென்ட் சிகிச்சை முறை பின்பற்றப்படும். இந்த சிகிச்சை என்பது அடைப்புகள் உள்ள இதயத்துக்கான ரத்த குழாய்களை விரிவடைய செய்யும் முறையாகும். இது 2 அடைப்புகள் வரை இருந்தால் பின்பற்றப்படும். இந்த சிகிச்சை என்பது சில மணிநேரங்களில் முடிந்துவிடும். மேலும் அன்றைய தினமே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடலாம்.
ஆனால் பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது அப்படியில்லை. மேலே கூறிய ஸ்டென்ட் சிகிச்சை முறையை ஒப்பிடும்போது இது முற்றிலும் வேறுபாடானது. இதயத்துக்கான ரத்தக்குழாய்களில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அடைப்புகள் இருந்தால் மட்டுமே இந்த சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரை செய்வார்கள். அந்த வகையில் தான் செந்தில் பாலாஜிக்கும் இதயத்துக்கான ரத்த குழாய்களில் 3 அடைப்புகள் உள்ளதால் அவருக்கு டாக்டர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை என்பது மார்புபகுதியில் துளையிட்டு செய்யப்படும். இதனால் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு உடனடியாக இயல்பாக நடமாட முடியாது. ஒருவாரத்தில் இருந்து மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனாலும் கூட இயல்பாக நடக்க சில நாட்கள் வரை காலஅவகாசம் தேவைப்படும். அதன்பிறகும் கூட மாத்திரை, மருந்துகள் எடுத்து கொண்டு சில மாதங்கள் வரை அமைதியாக ஓய்வு எடுக்க வேண்டியது அவசியமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications