முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதது ஏன்? ஓ பன்னீர்செல்வம் விளக்கம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வர் பழனிச்சாமி லண்டனில் இருந்து புறப்பட்டு இன்று அமெரிக்காவின் நியூயார்க் சென்றடைந்தார். முன்னதாக லண்டனில் கிங்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பது குறித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதேபோல் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்திருந்த திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வரின் வெளிநாடு பயணத்தில் உள்ள மர்மம் என்ன என்று கேட்டு நீண்ட அறிக்கை வெளியிட்டு இருந்தார்..
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
எந்த பிரச்சனையாக இருந்தாலும் எதிர்மறையான கேள்விகளையும், எதிர்மறையான பதில்களையும் அளித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்தவித மர்மமும் இல்லை என்றும் முதல்வர் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.