கல்வி கடனுக்கு CBIL ஸ்கோர் கேக்குறாங்க! ஆனா.. கார்ப்பரேட்டுக்கு எதுவும் இல்லை! என்னதான் பிரச்சனை?
சென்னை: கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் படும் துயரத்துக்கு அடிப்படையாக பலநேரம் இருப்பது சிபில் ஸ்கோர்தான். அதே நேரம் நீங்கள் கடனே வாங்காவிட்டாலும் கூட இந்த ஸ்கோர் குறைவாகத்தான் காட்டும். அப்படியெனில் இதில் என்னதான் பிரச்சனை? ஏன் சிபில் ஸ்கோர் இப்படி விளையாடுகிறது? இதனை இந்த செய்தி விவரிக்கிறது.
எஸ்பிஐ வங்கியில் பணிக்கு தேர்வான நபரின், சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தது என்று சொல்லி, வங்கி நிர்வாகம் அவரை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றமும் வங்கியின் உத்தரவை உறுதி செய்தது. இப்படியாக சிபில் ஸ்கோர் பெரும் பஞ்சாயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபில் ஸ்கோர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று எழுந்து வந்த குரல்கள் இப்போது தீவிரமடைந்திருக்கின்றன.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?
முதலில் சிபில் ஸ்கோர் என்றால் என்ன? என்று தெரிந்துக்கொள்வோம். நீங்கள் இதற்கு முன்னர் வாங்கிய கடன்களை சரியான முறையில் செலுத்தியிருக்கிறீர்களா என்று பார்த்து மார்க் போட்டு தரும் ஒரு அமைப்புதான் இந்த சிபில் சிஸ்டம். 300-900 வரை பாயிண்ட்கள் இருக்கும். இதில், 750க்கு மேல் உங்களுக்கு மதிப்பெண் இருந்தால், வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் கடன்கள் எளிதாக கிடைக்கும். 600 இருந்தால் கடன் கிடைக்காது. அல்லது மிக அதிக வட்டிக்கு கடன் கிடைக்கும்.
ஸ்கோர் தீர்மானிக்கப்படும் முறை
சரி இந்த ஸ்கோர் எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்று பார்ப்போம். பைக் வாங்க 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறீர்கள் எனில், அதற்கான EMI சரியாக செலுத்தி வந்திருந்தால், உங்களுக்கு நல்ல ஸ்கோர் காட்டும். இதில் ஒரே ஒரு EMI மிஸ் செய்திருந்தாலும் உங்கள் பாயிண்ட் கீழே இறங்கிவிடும். பைக் கடன் மட்டுமல்ல, வீட்டு கடன், கார் கடன், நகை கடன் என எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்.
கடன்தாரர்கள்
நம்மூரில் கடன் வாங்காதவர்கள்தான் சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால், வங்கிகளை பொறுத்தவரை நீங்கள் நல்லவர் எனில் கடன் வாங்கி அதை சரியான நேரத்தில் அடைத்திருக்க வேண்டும். கடனே வாங்காமல் இருந்தால் எந்த வங்கியும் உங்களுக்கு கடன் கொடுக்க முன் வராது. இதுதான் தற்போதைய சிக்கல். திருமணம், மருத்துவ செலவு, இதர அவசர தேவைக்கு நீங்கள் கடன் வாங்க முயல்கிறீர்கள் எனில், உங்களுக்கு கடன் கிடைக்காது.
இந்த பிரச்சனையால் நிதி நெருக்கடி மட்டுமல்லாது, வேலையும் கிடைக்காமல் போகும். அதேபோல, கல்விக்கடனும் கிடைக்காமல் போகலாம். அதாவது இந்த செய்தியின் தொடக்கத்தில் எஸ்பிஐ விவகாரம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த விஷயத்தில், வேலைக்கு சேர்ந்த நபருக்கு எந்த கடனும் இல்லை. 2020 காலத்தில் அவர் வாங்கிய கடனுக்கு சரியாக EMI செலுத்த முடியவில்லை. அப்போது கோவிட் காலம் என்பதால் வேலையிழப்பு, பொருளாதார சரிவு என உலகமே பாதிக்கப்பட்டிருந்தது.
வேலையிழப்பு
இருப்பினும், கஷ்டப்பட்டு உழைத்து இந்த கடனை அவர் கட்டி முடித்துவிட்டார். ஆனால், அவரது சிபில் ஸ்கோர் மிக குறைவாகவே இருந்திருக்கிறது. எனவே இப்போது அவருக்கு கிடைத்த வேலை பறிபோயிருக்கிறது. கடனைதான் கட்டிவிட்டாரே அப்புறம் என்ன? ஸ்கோரை அதிகரிக்க வேண்டியதுதானே! என நம்மால் கேட்க முடியாது. அதை செய்வது ரொம்ப கஷ்டமான வேலை.
இந்த ஸ்கோர் வழங்கும் வேலையை கடந்த 2002 வரை ஆர்பிஐதான் செய்து வந்தது. ஆனால், அதன் பின்னர் டிரான்ஸ்யூனியன் சிபில் லிமிடெட் (TransUnion CIBIL Limited) எனும் நிறுவனம் செய்து வருகிறது. இது அமெரிக்க நிறுவனமாகும்.
கல்விக்கடன்
இந்த நிறுவனத்தால் வேலையிழந்தவர்கள் ஒருபுறம் இருக்க, கல்வி கடன் கிடைக்கப்பெறாதவர்கள் பட்டியலும் நீள்கிறது. மாணவர்கள் எப்படி கடன் வாங்கியிருக்க முடியும்? எனவே, அவர்களுக்கு சிபில் குறைவாக இருக்கும். வங்கிகள் கல்விக்கடனை கொடுக்காது. மாணவருக்கு ஜாமீன்தாரராக ஒருவர் வர வேண்டும். அவரது சிபில் நன்றாக இருந்தால்தான் கல்விக்கடனே கிடைக்கும். இப்படித்தான் இந்த சிபில் ஸ்கோர் செயல்படுகிறது.
இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் நீங்கள் சிபில் ஸ்கோரில் 900 பாயிண்ட்களை பெற வேண்டும் எனில் அது சாத்தியமில்லாதது. ஏனெனில் இதற்கான நடைமுறைகள் என்னென்ன என்பது வெளிப்படையாக இல்லை. எனவேதான் இதனை பலரும் எதிர்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications