மு.க.அழகிரியின் பெயரை தொடர்ந்து பயன்படுத்தும் முதல்வர் ஸ்டாலின்.. "இதுதான் காரணமா"?
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் நிகழ்ந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட பூச்சி முருகனின் மகள் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரர் மு.க.அழகிரியின் பெயரை உச்சரித்தார்.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், எங்கள் குடும்பத்தில் மு.க. அழகிரி, தமிழரசு என தமிழில்தான் பெயர் வைக்கப்பட்டது என கூறினார். இதில் மு.க.அழகிரியின் பெயரை முதல்வர் ஸ்டாலின் உச்சரித்தார். இது போல் தொடர்ந்து அவரது பெயரை பயன்படுத்தி வருவதற்கு என்ன காரணம் இருக்கலாம் என ஆராய்ந்ததில் சில தகவல்கள் நமக்கு கிடைத்தன.
திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க. ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டதால் மூத்த மகன் மு.க.அழகிரி இதுதொடர்பாக தந்தையிடம் முறையிட்டதாக தெரிகிறது. அப்போது நடந்த வாக்குவாதத்தில் மு.க.அழகிரியை திமுகவிலிருந்து 2014-ஆம் ஆண்டு கருணாநிதி நீக்கியதாக சொல்லப்படுகிறது.

மு.க. அழகிரி
இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பதற்காக கருணாநிதியிடம் நிறைய பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அதற்கு கருணாநிதி விடாபிடியாக மறுத்துவிட்டதாக தகவல்கள் சொல்கின்றன. இந்த நிலையில் கருணாநிதி மறைந்த பிறகும் கட்சியில் சேருவதற்கு மு.க. அழகிரி முனைப்பு காட்டினார். ஆனால் திமுக பொதுச் செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் க அன்பழகன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை
இதையடுத்து மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார். மேலும் திமுகவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அவருடைய பிறந்தநாளின் போது புதிய கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் அது போல் எந்த அறிவிப்பும் நிகழவில்லை. சென்னைக்கு வந்தாலும் கோபாலபுரத்தில் உள்ள தாய் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார் மு.க.அழகிரி.

திமுக வெற்றி
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 125 இடங்களில் திமுக வென்று ஆட்சியை பிடித்தது. அப்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அண்ணன் என்ற முறையில் தம்பிக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலினை பார்த்துபொருமைப்படுகிறேன். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின் நல்லாட்சி தருவார். தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுகிறேன் என மு.க. அழகிரி வாழ்த்தினார்.

பதவியேற்பு விழா
இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மகன் தயாநிதி அழகிரியும் மகள் கயல்விழியும் வந்திருந்தனர். இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த மே 21 ஆம் தேதி மதுரையில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது மு.க.அழகிரியின் வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அவரது வீடு இருக்கும் சாலையை தவிர்த்துவிட்டு வேறு சாலையில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டார். பொது இடங்களிலும் பொது கூட்டங்களிலும் அண்ணன் அழகிரியின் பெயரை மு.க.ஸ்டாலின் உச்சரித்தாலும் அதை எடிட் செய்யாமல் முரசொலி நாளிதழில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் பூச்சி முருகன் வீட்டு இல்ல திருமணத்திலும் அவர் அழகிரியின் பெயரை பயன்படுத்தினார்.

அண்ணா அறிவாலய வட்டாரங்கள்
இதுகுறித்து அண்ணா அறிவாலய வட்டாரங்களிடம் விசாரித்த போது, திமுகவில் இணைய வேண்டும் என தொடர்ந்து மு.க.அழகிரி முயற்சி செய்து வருகிறார். இதற்காகவே புதிய கட்சியை அவர் தொடங்கும் முடிவையும் கைவிட்டுவிட்டார். ஆனாலும் திமுக தலைமையிடம் இருந்து பச்சை கொடி பறக்காதது மு.க.அழகிரிக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்தன. இதனால் அவரது ஆதங்கத்தை தணிக்கும் வகையிலும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது அவரது பெயரை சொல்லியிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். மற்றபடி இதற்கு வேறு எந்த முக்கிய காரணமும் இருக்காது என்றனர்.












Click it and Unblock the Notifications