ஸ்டாலின் எடுத்த பெரிய முடிவு.. எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி தேர்வு செய்யப்பட்டது ஏன்? காரணம் இதுதான்
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் தி.மு.கவை வழிநடத்தப்போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தற்போது அந்தப் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி தேர்வு செய்யப்பட்டது ஏன்? அதுகுறித்துப் பார்க்கலாம்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த திமுக வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார். கடந்த முறை அமைச்சராக இருந்த 31 பேரில் 15 பேர் தோல்வியடைந்தனர். துணை முதல்வராக இருந்த உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், திமுக சட்டசபை குழு தலைவராக உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விஜய் தலைமையிலான தவெக அரசு நாளை சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க உள்ள நிலையில், இன்று திமுக சட்டசபை தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக எதிர்க்கட்சியாகும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகிறார்.
திமுகவின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து
இந்தத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், திமுக 59 இடங்களுடன் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. ஜனநாயக முறைப்படி, அதிக இடங்களைப் பெற்ற இரண்டாவது கட்சியின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்படுவார். அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்றதால், அந்த வாய்ப்பு திமுகவிடம் வந்துள்ளது.
ஸ்டாலினின் அதிர்ச்சித் தோல்வி
திமுகவின் முதல்வர் வேட்பாளரான மு.க. ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சட்டசபை விதிமுறைகளின்படி, ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்க முடியும். ஸ்டாலின் தோல்வியடைந்ததால், திமுகவுக்கு ஒரு புதிய முகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சென்னையில் திமுகவின் ஒற்றை நம்பிக்கை
சென்னை மாவட்டத்தில் உ உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக இந்த முறை கடும் பின்னடைவைச் சந்தித்தது. 1991 தேர்தலுக்குப் பிறகு, சென்னையில் திமுக மிகக் குறைந்த இடங்களையே (வெறும் 2 இடங்கள்) வென்றது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: உதயநிதி ஸ்டாலின் (7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி).
துறைமுகம்: சேகர்பாபு வெற்றி
தலைநகர் சென்னையில் இருந்து தேர்வான செல்வாக்கு மிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் மட்டுமே உள்ளதால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்பொறுப்பு வழங்கப்படுவது தவிர்க்க முடியாததானது.
வாரிசு அரசியலைத் தாண்டிய தகுதி அங்கீகாரம்
திமுகவில் துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் அமைச்சரவை அனுபவம் மிக்கவர்களாக இருந்தாலும், விஜய்யின் வருகையால் ஏற்பட்டுள்ள "இளம் தலைமை" அரசியலுக்கு ஈடுகொடுக்க உதயநிதி ஸ்டாலினே பொருத்தமானவர் என திமுக தலைமை கருதுகிறது.
1. துணை முதலமைச்சராகப் பணியாற்றிய அனுபவம்.
2. சட்டமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள்.
3. திமுக இளைஞரணிச் செயலாளராகத் தொண்டர்களிடையே இருக்கும் செல்வாக்கு.
4. செய்தியாளர் சந்திப்புகளை எளிதாக ஹேண்டில் செய்யும் பக்குவம். ஆகியவை உதயநிதி ஸ்டாலினுக்கு கைவந்துள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என திமுக தலைமை கருதுகிறது.
சட்டமன்றப் போராட்டக் களம்
முதல்வர் விஜய்யை எதிர்கொள்ளவும், சட்டமன்றத்தில் திமுகவின் குரலாக ஒலிக்கவும் துடிப்பான ஒரு தலைவர் தேவைப்படுகிறார். உதயநிதியை எதிர்க்கட்சித் தலைவராக்குவதன் மூலம், 2031 தேர்தலை நோக்கி அவரை இப்போதிருந்தே தயார் செய்யலாம் என்ற திமுகவின் நீண்டகால வியூகமும் இதில் அடங்கியுள்ளது.
சவால்கள்
எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலினுக்கு இது ஒரு அக்னிப்பரீட்சை. ஏனெனில், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தவெக-வின் திட்டங்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல், மூன்றாவது இடத்தில் இருக்கும் அதிமுக-வை விடத் தனது கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்பதை அவர் நிரூபிக்க வேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications