ஊரான் வீட்டு நெய்யே.. வாலறுந்த நரி.. இது தமிழ்நாடு, ஆளுவது ஸ்டாலின்.. ஆளுநர் பருப்பு வேகாது: முரசொலி
சென்னை: தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து அவர்களிடம் தனது அறிவாற்றலை காட்டுவதாக நினைத்து தான் ஒரு "Hall boiled', அதாவது பாதி வெந்தவர் என்பதை ஆளுநர் ரவி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக முரசொலி விமர்சனம் செய்துள்ளது... அவருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்; இது தமிழ்நாடு.. ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இங்கு இவரது பருப்புகள் வேகாது என்றும் காட்டமாக முரசொலி குறிப்பிட்டுள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதனை ஆளுநர் ரவி கடுமையாக விமர்சித்திருந்தார்.. வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிடமாட்டார்கள், அவர்கள் கடுமையாக பேரம் பேசுபவர்கள். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

செய்தித்தாள்: ஆளுநரின் இந்த பேச்சிற்கு அமைச்சர்கள் பதிலடி தந்து வருகிறார்கள்.. "ஆளுநர் செய்தித்தாளை படிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதி போன்றும் எதிர்கட்சி போன்றும் பேசுவது வருந்தத்தக்கது, அவர் எதிர்கட்சி போன்று செயல்படுகிறார்" என்றார் அமைச்சர் பொன்முடி..
தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது ஆளுநர் ரவிக்கு அக்கறை இல்லை, இதன்காரணமாகவே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து வருகிறார் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. இந்நிலையில், திமுகவின் நாளேடான முரசொலியும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக வெளியிட்ட கட்டுரையில் உள்ளதாவது:
"தமிழ்நாட்டுக்கு ஆளுநர் என்ற பெய ரில் ஒரு 'சுகஜீவி நியமிக்கப்பட்டு அவர் இப்போது செய்து கொண்டிருக்கும் பணி இத்தகையதுதான்! ஆளுநருக்குத் தான் வேலையில்லை என்றால் தங்களுக்கு தரப்பட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் துணை வேந்தர்களை அழைத்து வைத்துக் கொண்டு நாம் குறிப்பிட்ட 'மேய்ந்த மாட்டை நக்கிடும் மாடு'- வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
சுகவாழ்வு: கொளுத்தும் வெயிலின் அனலால் தமிழ்நாட்டு மக்களெல்லாம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது குளு குளு கோடை வாசஸ்தலத்தைத் தேடி ஆளுநர் ரவி ஊட்டியில் 'டேரா போட்டுள்ளார்!. ஊரான் வீட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையே... எனும் பழமொழிக்கேற்ப தமிழ்நாட்டு அரசின் செலவில் மனிதர் சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்!.
'சுக்ரயோகம்' என்பார்களே அது போன்ற யோகக்காரர்கள் இந்தியாவின் ஆளுநர்கள்! நமது தமிழ்நாடுஆளுநர் ரவியையே எடுத்துக் கொள்ளுங்களேன்! அவர் சென்னை கின்டியில் வசிக்கும் ராஜ்பவன் 156 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இதுதவிர, ஊட்டியிலும் 86.72 ஏக்கரில் ராஜ்பவன் அமைந்துள்ளது. சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலா? ஆளுநர் சுகவாசம் தேடி அங்கே புறப்பட்டு விடுவார்! அவருக்கென்ன? யார் கும்பி எரிந்தால் என்ன, குடல் கருகினால் என்ன அவருக்கு தேவை குளுகுளு வாசம்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகளினால் என்ன? தமிழ்நாட்டு பயணிகள் நிலை என்ன ஆனால் என்ன? அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை! கடந்த ஜூன் 2-ந் தேதி இரவு நாட்டையே குலுக்கிய ரயில் விபத்து ஓரிசாவில் நடந்துள்ளது! சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி அந்தப் பகுதி எங்கும் மரண ஓலம் கேட்கிறது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
விபத்து: தமிழ்நாட்டு முதல்வர் செய்தி கேட்டு உடனடியாக விபத்து பகுதிக்கு அமைச்சர்களை அனுப்பி, நிவாரணப் பணிகள் எப்படி நடக்கின்றன என்பதை வினாடிக்கு வினாடி வார் ரூமோடு தொடர்பு கொண்டு அறிந்து கொள்கிறார்! ஒரிசா முதல்வர் காலையில் விபத்து நடந்த இடத்துக்கு விரைகிறார் ஏன் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் விரைகின்றனர்!
நிமிடத்துக்கு நிமிடம் விபத்தில் மரணம் அடைந்தோர் எண்ணிகை அதிகரித்து வரும் அதிர்ச்சி செய்திகள் வருகின்றனர். படுகாயமுற்றவர்கள் கதறி அழுவோர் எண்ணிக்கை உயர்த்து கொண்டேஇருக்கிறது! தமிழ்நாட்டில் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்கத்தை வெகு விமரிசையாகக் கொண்டாட எண்ணி அதற்கான அணைந்து ஏற்பாடுகளும் நாடு முழுவதும் நடந்து முடிந்திருந்த நிலையிலும், அவைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக கழகத் தலைவர் தளபதி அறிவிக்கிறார்.
குளுகுளு வாசஸ்தலம்: ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் திட்டமிட்டபடி, நடந்த எது குறித்தும் கவலைப்படாது. ஜுன் 3-ந் தேதி குளு குளு வாசஸ்தலத்திற்கு துணை வேந்தர்களை அழைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அழைத்து. தனது அறிவிலித்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்!
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து அவர்களிடம் தனது அறிவாற்றலைக் காட்டுவதாக நினைத்து தான் ஒரு "Half boiled', அதாவது பாதி வெந்தவர் என்பதை ஆளுநர் ரவி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்! ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசப் போவதாக அறிவித்து, துணைவேந்தர்களுக்கு சம்பந்தமில்லாத தொழில் முதலீடுகளைப் பற்றி பேசி தனது முதிர்சியற்ற அறிவை வெளிப்படுத்தியுள்ளார்.
உரல் + அவல்: "நாம் கேட்பதாலோ, வெளிநாடு சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது" - என்று பேசி அவலை நினைத்து உரலை இடித்துள்ளார்!
ஆம். தமிழ்நாடு முதல்வரை நினைத்து பிரதமர் மோடியை இடித்துள்ளார். ஜப்பான் சென்ற பிரதமர் மோடி ஜப்பானின் வர்த்தகத் தலைவர்களை சந்திந்து இந்தியாவில் முதலீடுசெய்யவுள்ள வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இப்படி ஏடுகளில் செய்திகள் வந்ததை ஆளுநர் ரவி படித்திருப்பார் என்றே கருதுகிறோம்! ஆளுநர் ரவி பல நேரங்களில் தான் என்ன பேசுகிறோம். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் 'ஆப்பசைந்த 'குரங்காய்' அகப்பட்டுக் கொள்கிறார்!.

தன்னால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் தான் என்ன பேசி னாலும் அதனை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்ற எண்ணத்தில் ரவி அவர்களிடையே பேசினாலும் அதில் காணப்படும் அறிவிலித்தனத்தை அங்கு வந்த துணைவேந்தர்களில் சிலர் உணர்ந்து இருப்பார்கள்.
விருதுபட்டி சனியன்: விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்குவது? - எனப் பழமொழி கூறுவார்களே. அதுபோல வேண்டாத விவகாரங்களில் தலையீட்டு 'சனியனை' விலைகொடுத்து வாங்குவதில் ஆளுநர் ரவிக்கு பல நேரங்களின் ஒரு அற்ப சந்தோசம்! சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு பல நேரங்களில் வாலறுந்த நரியாக ஆனாலும் அவர் பாடம் பெறுவதில்லை!
பருப்புகள் வேகாது: மீண்டும் மீண்டும் வாலை நுழைத்து ஆழம்பார்க்கிறார்! அவருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்; இது தமிழ்நாடு.. ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இங்கு இவரது பருப்புகள் வேகாது! என முரசொலி காட்டமாக கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications