நிஜமாகின்றது நிழல்.. "ஈயம் பூசன மாதிரி + பூசாத மாதிரி".. திமுகவை ஓவர்டேக் பண்றாரா எடப்பாடி பழனிசாமி
சென்னை: திடீர்னு இன்டர்நேஷனல் பாலிடிக்ஸில் இறங்கிவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. என்னவாம்?
பாஜக கூட்டணியை முறித்தபோதும்கூட, அதிமுகவுக்கு இஸ்லாமிய கட்சிகளின் ஆதரவுகள் வெகுவாக கிடைக்கவில்லை.. அசாதுத்தீன் ஓவைசி தரப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தந்தள்ளது.. அதேபோல, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தந்துள்ளது.. எஸ்டிபிஐ கட்சியும் சந்தித்து ஆதரவு தந்துள்ளது..

மறுமலர்ச்சி : ஹஜ் லைபர் சொசைட்டி, ஜனநாயக முஸ்லிம் மறு மலர்ச்சி கழகம் உள்ளிட்ட 6 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் எடப்பாடியை சந்தித்து பேசினிர்கள். ஆனாலும், கூட்டணியை பலப்படுத்தும் அளவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு, பெருவாரியாக எடப்பாடிக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
அதனால்தான், நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், சிறுபான்மையினர் வாக்கு வங்கியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று நிர்வாகிகளிடம் விவாதித்தாராம் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி: அதுமட்டுமல்ல, மாஜிக்கள் மீது வழக்கு தொடர தமிழக ஆளுநர் ரவி அனுமதி அளித்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்துகூட, தனக்கு நெருக்கமானவர்களிடம் நேற்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.. "விசாரணை என்று வந்தால் கண்டிப்பாக கைது நடவடிக்கை நடக்கும். அது நமக்கு சிக்கல்தான். இது மற்றவர்களை நோக்கியும் பாயும். அதில் நானும் கூட விதிவிலக்கல்ல..
அதேசமயம், ஒரே ஒரு நன்மை நமக்கு கிடைத்துள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை அழுத்தமாக நாம் சொல்வதற்கும், அதை மக்கள் நம்புவதற்கும் வசதியாக இருக்கும். சிறுபான்மையினர் இனி நம்மை முழுமையாக நம்புவார்கள். "அதிமுக -பாஜக சீக்ரெட் டீலிங்" கில் இருப்பதாக திமுக பரப்புவரும் பொய்ப்பிரச்சாரத்தையும் கவர்னரின் கையெழுத்து உடைத்து விட்டது. தெரிந்தோ தெரியாமலோ நமக்கு நன்மை செய்துள்ளது மத்திய அரசு." என்று தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தனம்: பிறகு, திடீரென வெளியிட்ட ஒரு அறிக்கையில், "உலக நாடுகளின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் அராஜகம் கண்டனத்துக்கு உரியது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பாலஸ்தீன விவகாரத்தில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
லோக்கல் பாலிட்டிஸில் இருந்து திடீரென இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ் பற்றியெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசியதுமே, தமிழக அரசியல் களம் மட்டுமல்ல, டெல்லி மேலிடமும் குழம்பி விட்டதாம்.
முஸ்லீம் வாக்குகள்: ஆனால்,இதற்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது என்கிறார்கள்.. இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவாக இருந்து வருவதால், பாஜக மீது முஸ்லிம்கள் வருத்தத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.. இந்த நேரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தருவது, இஸ்லாமியர்கள் மீதான நம்பிக்கையை பெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறாராம்.. அத்துடன், பாஜக மீதான எதிர்ப்பு வாக்குகளையும், அறுவடை செய்ய முடியும் என்று நினைக்கிறாராம்.
இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. "அதிமுக - பாஜகவுக்குள் ரகசிய டீலிங் இப்போதுவரை இருக்கிறது" என்று திமுக கூட்டணி தொடர்ந்து விமர்சித்து கொண்டிருக்கிறது. பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்ட பிறகும்கூட, திமுக இவ்வாறாக, அதிமுகவை பிரச்சாரம் செய்து கொண்டிருப்பது, எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை மூட்டிக்கொண்டேயிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி: அதேபோல, பாஜக தலைவர்களையோ, பாஜகவின் கொள்கைகளோயோ, பாஜக அரசின் திட்டங்களையோ, இதுவரை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்காமல் இருப்பதையும், திமுக தொடர்ந்து சீண்டி கொண்டிருக்கிறது.. அவ்வளவு ஏன்? ஆளுநர் பேசிய ஆரிய-திராவிட சித்தாந்த கருத்துக்குகூட எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவில்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே, பாலஸ்தீன விவகாரத்தை அறிக்கையாக வெளியிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.. இதன்மூலம், "பாஜகவை நாங்களும் கண்டிக்கிறோம்" என்பது போன்ற ஒரு பிம்பத்தை பதிவு செய்யவும் எடப்பாடி பழனிசாமி முனைந்திருப்பதாக சொல்கிறார்கள்.
கவனிக்கும் பாஜக: எனினும், பாஜகவை கடுமையாக எதிர்க்காமலும், அதேசமயம் மேலோட்டமாக விமர்சிப்பது போலவும், தெரியவேண்டும் என்பதற்காகவே, பாலஸ்தீன அறிக்கை வெளியிடப்பட்டதாம். மொத்தத்தில், ஈயம் பூசியது போலவும் இருக்கணும், பூசாதது போலவும் இருக்கணும் என்பதே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரமாம்..!!
ஆனாலும், இதெல்லாம் அதிமுகவுக்கு வாக்குகளாக மாறுமா? சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அதிமுகவுக்கு சாதகமாக விழுமா? திமுகவின் சிறுபான்மை ஓட்டுக்களை அதிமுகவால் உடைக்க முடியுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications