வீட்டுப் பூஜைக்கு மோடியை ஏன் அழைத்தார்? சந்திரசூட் செய்தது தர்மமா? ஹரி பரந்தாமன் கேள்வி
சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் பூஜைக்கு ஏன் பிரதமர் மோடி அழைக்கப்பட்டார் என்று முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அது தொடர்பாக வீடியோ பதிவு வெளியானது. அந்த விவகாரம் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. ஒரு நீதிபதியின் வீட்டில் நடைபெறும் விழாவிற்குப் பிரதமரை ஏன் அழைக்க வேண்டும்? அதன் மூலம் நாட்டிற்கு இவர்கள் சொல்ல வரும் செய்தி என்ன? நீதிபதியானவர் பொதுவானவர் இல்லையா? அவர் ஏன் தனிப்பட்ட இல்ல பூஜைக்குப் பிரதமரை வரவழைத்தார் என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.

இது தொடர்பாக முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் சில கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார். இந்தச் சர்ச்சை தொடர்பாக ஹரி பரந்தாமன் அளித்துள்ள ஒரு பேட்டியில் பல விசயங்களை அவர் அலசி ஆராய்ந்திருக்கிறார். ஹரி பரந்தாமன் பேசுகையில், "நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது. நீதிமன்றம் என்பது சுதந்தரமாகச் செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. கடந்த 74 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு நீதிபதியும் தனது வீட்டில் நடைபெறும் தனிப்பட்ட பூஜை விழாவுக்கு பிரதமரை அழைத்ததாக முன் உதாரணமே இல்லை.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது நடைபெற்ற ஒரு ரம்ஜான் விருந்தில் அன்றைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார் என்று பாஜகவினர் ஒரு விளக்கம் அளித்துள்ளனர். ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது என்பதே என் வாதம். மேலும் மன்மோகன் சிங் ஏற்பாடு செய்தது பொது விருந்து. அதில் நூற்றுக்கணக்கான நபர்கள் கலந்துகொண்டார்கள். சந்திரசூட் வீட்டில் நடந்தது தனிப்பட்ட பூஜை. அதில் ஏன் பிரதமர் கலந்து கொண்டார் என்பதே கேள்வி. அதைவிட நீதிபதி ஏன் பிரதமரை அழைத்தார் என்பதுதான் முக்கியமான கேள்வி.

சந்திரசூட் இதை விழாபோல நடத்தி எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தால் கேள்வி எழப்போவதில்லை. தனிப்பட்ட வகையில் பிரதமர் மட்டுமே சென்றதால்தான் சந்தேகம் வருகிறது. செபி வழக்கு, ரஃபேல் வழக்கு என எதை எடுத்துக் கொண்டாலும் அதில் மத்திய அரசுதான் சம்பந்தப்பட்டுள்ளது.
ஆகவேதான் இந்தச் சந்திப்புக்குப் பிறகு சிவசேனா சஞ்சய் ராவத் தங்கள் கட்சி உரிமை சார்ந்த வழக்கை சந்திரசூட் விசாரிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். நானே கேட்கிறேன். இவரிடம் செந்தில் பாலாஜி வழக்குப் போனால் நமக்கு என்ன தோன்றும்? பில்கிஸ் பானு வழக்கு இவர் கைக்குச் சென்றால் நமக்குச் சந்தேகம் வருமா? வராதா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அபரிமிதமான அதிகாரம் இருக்கிறது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதேபோல்தான் 2018 ஒரு பிரச்சினை எழுந்தது. அன்றைக்கு தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவை எதிர்த்து இவருக்கு அடுத்த நிலையிலிருந்த 4 தலைமை நீதிபதிகள் பிரஸ் மீட் கொடுத்தார்கள். தீபக் மிஸ்ரா ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று குற்றஞ்சாட்டினார்கள். இது நடந்ததா இல்லையா? அதுவரை அப்படி ஒரு நிகழ்வை நாடு சந்தித்ததே இல்லை. அப்படி என்றால், இப்போது சந்திரசூட் வீட்டுக்குப் பிரதமர் போகிறார். சந்தேகம் மக்களுக்கு வருமா இல்லையா?
இதுவே நீதிபதியின் வீட்டுக் கல்யாணம் அல்லது துக்க நிகழ்வு என்றால் யாரும் கேள்வி எழுப்பப் போவதில்லை. இது தனிப்பட்ட வீட்டுப் பூஜை. அதற்கு ஏன் மோடி அழைக்கப்படுகிறார்? பிரதமரை அழைக்க வேண்டிய தேவை தலைமை நீதிபதிக்கு ஏன் வந்தது? அது தொடர்பாகக் கேள்வி எழுமா?இல்லையா?" என்கிறார்.












Click it and Unblock the Notifications