24 ஆண்டானாலும் முடிக்க மாட்டீங்கனு நீதிபதிகள் கண்டித்தும் நாகஜோதி மாற்றப்பட்டது ஏன்? அடுத்தது என்ன?
சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றமே கண்டித்தும் விசாரணை அதிகாரி நாகஜோதி மாற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட 5 வகையான பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ 1.62 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகாரை சென்னையைச் சேர்ந்த கணேஷ் குமார் அளித்துள்ளார். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நாகஜோதி மேற்கொண்டு வந்தார். கிட்டதட்ட அவர் இரு ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிரான சில ஆதாரங்களையும் அவர் சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது 6 மாத கால அவகாசத்தை காவல் துறை கேட்டது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து எதற்காக கால அவகாசம் என கேட்டது.

அதற்கு சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் கேட்கிறோம் என சொன்னதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, உங்களுக்கு என்றைக்குத்தான் பிரச்சினைகள் இல்லை. நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்திலும் விசாரணையை முடிப்பீர்கள், 24 ஆண்டுகளானாலும் விசாரணையை முடிக்காமல் இருப்பீர்கள் என காட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக டிஜிபி, உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இந்த வழக்கு விசாரணையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள் என அவர்களே இங்கு வந்து சொல்லட்டும் என நீதிபதிகள் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தனை கண்டிப்புக்கு பிறகு உச்சநீதிமன்றம் 2 மாதங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்துள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது.
இந்த சூழலில் 2 ஆண்டுகளக விசாரணை நடத்தி வந்த நாகஜோதி இரவோடு இரவாக ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு பதிலாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஸ்டாலின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக டிஜிபிக்கு சம்மன் அனுப்புவோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக பேசியும் 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நாகஜோதியை மாற்றிவிட்டு ஸ்டாலினை நியமித்துள்ளனர். உச்சநீதிமன்றம் சொன்னது போல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை தாமதமாகும் நிலை உள்ளதால் செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நாகஜோதி இடமாற்றம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications