லிஸ்டில் உதயநிதி பெயர்.. தேதியே கொடுக்காமல் ஓரம்கட்டிய ஆளுனர் மாளிகை? ரவி அப்படி செய்தாரே? குழப்பம்!
சென்னை: நீட் விவகாரம், துணை வேந்தர் நியமன விவகாரம் என்று பல விஷயங்களில் ஆளுநர் ரவி தரப்பிற்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் விவகாரத்தில் புதிதாக இன்னொரு விஷயமும் சேர்ந்துள்ளது.
ஊட்டியில் ஆளுநர் ரவி தலைமையில் துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இணை வேந்தரான உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை அழைக்காமல் இந்த கூட்டத்தை நடத்துவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் மூலம் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படும் அதிகாரம் நீக்கப்பட்டு, மாநில அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அதிமுக, பாஜக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மோதல்
ஏற்கனவே நீட் மோதல் உள்ள நிலையில்தான் இந்த துணை வேந்தர் நியமன பிரச்சனையும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த மோதல் விவகாரம் சூடாக போய் கொண்டிருக்கும் நிலையில்தான் புதிதாக இன்னொரு விஷயமும் இதில் சேர்ந்துள்ளது. அது அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிரச்சனை! சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 2021-22 கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா ஏப்ரலில் நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.

நடக்கவில்லை
ஆனால் இந்த மாதமே முடிய போகிறது. இதுவரை விழா நடக்கவில்லை. ஆளுநரும் இன்னும் 5 நாட்கள் ஊட்டியில் இருப்பார் என்பதால் பட்டமளிப்பு விழா நடப்பது கஷ்டம் என்று கூறுகிறார்கள். இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் கவனத்துக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த விழாவை நடத்துவதற்கான தேதியையும் அனுமதியையும் ராஜ்பவனில் இருந்து கொடுக்கப்படவில்லை.

தேதி தரவில்லை
இதுவரை இதனால் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை. ஏன், என்ன காரணம் என தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறதாம் பல்கலைக்கழகம். எப்படி இதற்கு அனுமதி வாங்குவது. ஆளுனர் ரவி வேறு அதிருப்தி எதிலும் இருக்கிறாரா இல்லை பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று கேள்வி அதிகாரிகள் இடையே எழுந்துள்ளதாம். இது பற்றி பல்கலைக்கழக நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம்.

சந்தேகம்
ஒருவேளை, பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால்தான் இப்படி செய்கிறாரா என்ற கேள்வி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதால், ஆட்சிமன்ற குழு லிஸ்டில் அவர் பெயர் இருப்பதால் ஆளுநர் இப்படி செய்கிறாரோ .. இதனால் பட்டமளிப்பு விழாவுக்கு தேதி தராமல் கவர்னர் இழுத்தடிக்கிறாரோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது உயர்கல்வி வட்டாரம்.












Click it and Unblock the Notifications