அந்த ஒரு கேள்வி.. திரும்பி பார்க்காம போன ஓபிஎஸ்.. அதிர வைத்த அண்ணாமலை.. தாஜ் ஹோட்டலில் என்ன நடந்தது?
சென்னை: நேற்று பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்கும் நிகழ்வில் நடந்த சில விஷயங்கள் தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது..
Recommended Video
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
ஜூலை 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அன்புமணி ஃபர்ஸ்டு.. ஓபிஎஸ் நெக்ஸ்டு.. பாஜக தந்த ட்விஸ்டு! திரௌபதி நிகழ்வில் அண்ணாமலை செய்த காரியம்
ஆதரவு
இந்த நிலையில் தமிழ்நாட்டு கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக நேற்று முர்மு சென்னை வந்து இருந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இதற்காக பாஜக சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் பாஜக, அதிமுக, பாஜக கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதேபோல் பல்வேறு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் இந்த நிகழ்வும் கலந்து கொண்டனர்.
மேடையில் இருந்தனர்
இந்த நிகழ்வு மேடையில் செங்கோட்டையன், பொன்னையன், ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் மேடையில் இவர்கள் இருந்த போது ஓ பன்னீர்செல்வம் மேடைக்கு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மேடைக்கு வருவதை தவிர்த்தார் . அவர் சென்ற பின்தான் ஓ பன்னீர்செல்வம் மேடைக்கு வந்தார். ஓபிஎஸ் மேடைக்கு வந்ததும் அண்ணாமலை அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்தார்.
அண்ணாமலை
அண்ணாமலை அப்படியே ஓபிஎஸ் பக்கம் சென்று, அவருக்கு பொன்னாடை போர்த்தினார். அண்ணாமலையின் இந்த மரியாதையை ஓபிஎஸ்ஸே எதிர்பார்க்காமல் கொஞ்சம் வியப்பாக பார்த்தார். கடந்த சில காலமாக அதிமுகவில் ஓபிஎஸ் ஓரம்கட்டப்பட்டு வந்த நிலையில், இப்படி பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென மரியாதை கொடுத்தது அவருக்கு வியப்பை கொடுத்து இருக்கலாம். இதன் பின் முர்முவை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தார்.
தர்மசங்கடம்
இந்த நிலையில் நேற்று ஓபிஎஸ் - இபிஎஸ் ஒரே நேரத்தில் மேடையில் தோன்றாதது ஏன் என்று கேள்வி எழுந்தது. இதற்கு பாஜக தரப்பில் சில நிர்வாகிகள் அளித்த விளக்கத்தில், இருவரையும் ஒன்றாக அமர வைக்கவே திட்டமிட்டோம். ஆனால் இருவரும் ஒன்றாக அமர தயாராக இல்லை. இதனால் ஒருவரை மட்டுமே மேடையேற்ற வேண்டும். ஓபிஎஸ் ஏற்கனவே டெல்லியில் முர்முவிற்கு ஆதரவு தெரிவித்து விட்டார். டெல்லியில் ஓபிஎஸ்ஸுக்கு மரியாதை கொடுக்கப்பட்டது.
எடப்பாடி
ஆனால் எடப்பாடிதான் முர்முவை சந்திக்கவில்லை. இதனால் அவரை மேடையேற்றும் முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் வந்த ஓபிஎஸ்ஸுக்கும் பொன்னாடை கொடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே இரண்டு பேரையும் தனி தனியாக மேடை ஏற்றினாலும், அதனால் மோதல் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டோம், என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். அதாவது மேடையில் தர்மசங்கடம் ஏற்படாமல் இருக்க பாஜகதான் இந்த ஏற்பாட்டை செய்ததாக கூறி உள்ளனர்.
பதில் இல்லை
இந்த நிலையில் நிகழ்வு முடிந்து வெளியே வந்த ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில்.. தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். சட்ட விதிப்படி இப்போதும் தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டார். அதன்பின் ஏன் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒன்றாக மேடையில் தோன்றவில்லை என்று செய்தியாளர் கேட்டதும், அதற்கு பதில் சொல்லாமல் திரும்பி பார்க்காமல் ஓபிஎஸ் அங்கிருந்து கிளம்பி சென்றார்.