எப்படி கை வைக்கலாம்? கொதித்து எழுந்த தமிழிசை.. தூக்கியடிக்கப்பட்ட "தலை".. புதுச்சேரியில் பரபர ஆர்டர்
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ள நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்த உத்தரவு ஒன்று அங்கு கவனம் பெற்றுள்ளது.
Recommended Video
புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு கோகிலாம்பிகை உடனுறை அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்திற்கு புதுச்சேரி அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி அங்கு வந்தார்.

கூட்டம் அதிகரிப்பு
இந்த நிலையில் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டதால் இங்கு பாஜக,. என். ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கூடினர். தொண்டர்கள் பலர் நூற்றுக்கணக்கில் இங்கு கூட்டமாக குழுமி இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் போலீசார் இங்கே குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தேரோட்டம் தொடங்கியதும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க வந்தனர்.

என்ன நடந்தது?
அங்கே வடம் பிடித்து இழுக்க துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி உடன் வந்தார். அப்பொழுது அவரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சற்று பின்னோக்கி வந்தார். அவருக்கு வழிவிடும் விதமாக நமச்சிவாயத்தின் பாதுகாவலர் ராஜசேகர் என்பவர் முதலமைச்சர் ரங்கசாமியை இடது கையால் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. முதல்வரின் முகத்தை பார்க்காமல்.. அப்படியே அவரின் கையை அமுக்கி தள்ளினார்.

பின்னோக்கி சென்றார்
இதனால் நிலை தடுமாறி பின்னோக்கி செல்லும் முதலமைச்சர் ரங்கசாமி சுதாரித்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இணையத்தில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். துணை ஆளுநருக்கு கொடுக்கப்படும் மரியாதை அங்கு முதல்வருக்கு தரப்படவில்லை என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதோடு பாதுகாவலர் ராஜசேகரை பதவியில் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

ராஜசேகர் மாற்றம்
இந்த நிலையில் பாதுகாவலர் ராஜசேகரை பணியில் இருந்து மாற்றும்படி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இவரின் உத்தரவின்படி பாதுகாவலர் பொறுப்பில் இருந்து அவர் விடுக்கப்பட்டு, ஆயுத படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். புதுச்சேரியில் முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ள நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யார் இவர்?
தற்போது உள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரிந்த ராஜசேகர் கடந்த காங்கிரஸ் அரசில் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பாதுகாவலராக பணிபுரிந்து உள்ளார். திருபுவனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது மீண்டும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications