அதிமுக மேட்டர்.. "பார்த்துக்கலாம்"! கடைசி வரை மூச்சே விடாத ஸ்டாலின்! "ஸ்மார்ட் மூவ்".. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக விவகாரத்தில் சில டாப் தலைகள் தூது விட்டும் கூட திமுக தரப்பு தலையிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியான திமுக இதில் தலையிடும் என்று அதிமுகவில் சில தலைகள் எதிர்பார்த்த நிலையில்.. முதல்வர் ஸ்டாலின் தரப்பு இதில் தலையிடாமல் தூரத்தை கடைபிடித்ததாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக விவகாரம்.. ராயப்பேட்டை அலுவலக கதவுகளை தாண்டி நடுத்தெருவுக்கு வந்துள்ளது. இனி இது வெறும் உட்கட்சி மோதல் என்பதை தாண்டி.. தமிழ்நாடு அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்க போகும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு, அதிகாலை வந்த தீர்ப்பு, ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டது, ஓபிஎஸ் டெல்லி பயணம், ஒற்றை தலைமைக்கான மோதல் என்று அதிமுக விவகாரம் உச்சத்தில் இருக்கிறது. தேசிய அளவில் அதிமுகவில் நடக்கும் விவகாரங்கள் கவனம் பெற்றுள்ளன.

தொடக்கத்திலேயே தலையிடவில்லை
இந்த அதிமுக விவகாரத்தில் ஆளும் கட்சி என்ற முறையில் தொடக்கத்திலேயே திமுகவின் ஆதரவை அதிமுகவில் சிலர் வேண்டி உள்ளனர். சிலர் என்று சொல்வதை விட ஓபிஎஸ் தரப்பு இது தொடர்பாக முதல்வரின் ஆதரவை வேண்டி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில் ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் எம்பி சந்தித்தது கூட இந்த பிரச்சனைகளை எதிர்நோக்கித்தான் என்கிறார்கள். அதிமுக பொதுக்குழுவில் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஓபிஆர் நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஓபிஎஸ் முயன்றார் - கோர்ட் பாதை
அதோடு இல்லாமல்.. பாதுகாப்பு பிரச்சனை காரணமாக பொதுக்குழுவை நடத்த விட கூடாது என்று அரசுக்கும் போலீசுக்கும் ஓபிஎஸ் மனு கொடுத்தார். முதல்வர் ஸ்டாலின் நினைத்து இருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிலைப்பாடு எடுத்து கூட்டத்தை தடை செய்து இருக்கலாம். சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கூட்டத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இது எதையும் கண்டுகொள்ளவில்லை. கோர்ட் உத்தரவு படியே, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

டெல்லி வரை போனார்
இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காத அளவிற்கு 2000 போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுக்குழுவிற்கு முதல்நாள் இரவு வரை ஓபிஎஸ் தரப்பு முதல்வர் ஸ்டாலினை பேச அணுகி இருக்கிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தரப்போ இந்த பக்கமும் - அந்த பக்கமும் பிடி கொடுக்காமல் .. ஒதுங்கியே இருந்திருக்கிறார். பாஜக போல இதில் எந்த விதத்திலும் தலையிட ஆளும் திமுக தரப்பு விரும்பவில்லையாம். இதனால்தான் வேறு வழியில்லாமல் மீண்டும் டெல்லிக்கு போயிடுங்க சிவாஜி என்று ஓபிஎஸ் டெல்லிக்கு பாஜக தலைகளை பார்க்க சென்று இருக்கிறார்.

கமெண்ட் அடித்தார்கள்
அதிகபட்சம் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது எல்லாம்.. திருமண நிகழ்ச்சி ஒன்றில்.. இங்கே மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. அங்கே மண்டபத்தில் (அதிமுக பொதுக்குழு) என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் என்று கிண்டலாக பேசினார். அதேபோல் துரைமுருகன் அதிமுக பொதுக்குழு பற்றி கேட்டதற்கு வாய் விட்டு சிரித்தார். அதை தவிர திமுக தரப்பு இதில் பெரிதாக கமெண்ட் எதுவும் செய்யவே இல்லை.

என்ன காரணம்?
ஆளும் தரப்பு இதில் வேண்டும் என்றே தூரத்தில் இருந்து அணுகி உள்ளதாக உடன் பிறப்புகள் கூறுகிறார்கள். இதற்கான காரணங்களையும் அவர்கள் அடுக்கி உள்ளனர். முதல் விஷயம், அதிமுக எதிர்க்கட்சி, பிரதான எதிர்க்கட்சி. ஜெயலலிதா இறந்த போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ஆட்சியை கலைக்க வாய்ப்பு வந்த போது கூட திமுக அதிமுக விவகாரத்தில் தலையிடவில்லை. அப்படி இருக்கும் போது இப்போது அக்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள் திமுகவினர். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்ற மோடிலேயே இருக்கிறது திமுக. அதோடு பெரும்பாலும் எடப்படியே அதிமுகவில் ஒற்றை தலைவர் ஆவார் என்று திமுக தரப்பு கணித்துள்ளதாம்.

யாருக்கும் நண்பர் அல்ல
கோடநாடு வழக்கு இருப்பதால் இது ஒரு வகையில் திமுகவிற்கு சாதகமான விஷயம்தான். எடப்பாடியை கட்டுக்குள் வைக்க இது உதவும்.. ஒரு வகையில் ஸ்மார்ட் மூவ்தான் இது என்கிறார்கள் உ.பிக்கள்.. இதனால்தான் ஓபிஎஸ்ஸுக்கு உதவி செய்யவும் திமுக விரும்பவில்லை என்கிறார்கள். இதெல்லாம் போக அரசியலில் இன்று ஓபிஎஸ் - இபிஎஸ் அடித்துக்கொள்வார்கள். நாளையே சேர்ந்து கொள்வார்கள். இடையில் திமுக புகுந்து எதிர்காலத்தில் தேவையில்லாத அவப்பெயரை.. மோடிதான் சமரசம் பேசினார் என்று ஓபிஎஸ்சொன்னது போன்ற அவப்பெயரை சுமக்க வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications