முருக பக்தர்கள் மாநாட்டை சிலர் அரசியல் ஆக்கிவிட்டனர்! சாமி கும்பிட நினைவுபடுத்துவது தவறா?-சரத்குமார்
சென்னை: இந்து முன்னணி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முருக பக்தர்கள் மாநாட்டில், பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பங்கேற்கவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் கவனம் பெற்றிருக்கிறது.
சென்னையில் 'கண்ணப்பா' திரைப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர், திரைப்பட விமர்சனங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். முருக பக்தர்கள் மாநாட்டில் ஏன் பங்கேற்கவில்லை என்ற பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கழுத்தில் அணிந்திருந்த செயினை தூக்கி காண்பித்து,

"நான் ஹைதாராபாத் சென்றிருந்ததால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு போக முடியவில்லை. முருகன் என்னோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். என்னால் மாநாட்டில் பங்கேற்க முடியாததால் இது குறித்து வீடியோவை பதிவு செய்து அனுப்பியிருந்தேன். நீங்கள் அதை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்த அவர், பத்திரிகையாளர்களுக்கு விரிவாக பேட்டியளித்திருந்தார். அதில், "மாநாடு சிறப்பாக நடைபெற்றது. என்னால் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் பக்தர்கள் மாநாட்டில் பெரும்பாலும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு வீடியோவை பதிவிட்டு அனுப்பியிருந்தேன். மாநாடு நல்லபடியாக நடந்திருக்கிறது சந்தோஷம்.
முருகன் மாநாட்டில் என்ன அரசியல் இருக்கிறது எனக்கு புரியவில்லையே! சில காலகட்டங்களில் சில வழிபாடுகளை மறந்து விடுவாரோ என்று எண்ணி அதை நினைவுபடுத்துவது தவறா? இஸ்லாமிய சகோதரர்கள் வெள்ளிக்கிழமை ஆனால் மசூதிக்கு செல்கிறார்கள். கிறிஸ்தவ சகோதரர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆனால் தேவாலயத்திற்கு செல்கிறார்கள். அப்படி நாமும் ஒரு நாளை வைத்துக் கொண்டு வழிபட்டு தானே வருகிறோம். வழிபாட்டை நினைவுபடுத்துவது அரசியலா? நாங்கள் சாமி கும்பிட்டால் அது கட்சி நீங்க எல்லாம் போய் பார்த்தால் அது கட்சி இல்லையா? இது நியாயமா!
இந்த நிகழ்வு ஆன்மீகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் நடத்தப்பட்டது பக்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் நடத்தப்பட்டது. ஆனால் சிலர் இதை அரசியல் ஆக்குகிறார்கள். இதை அரசியலாக்க முயற்சிப்பது தவறு.
சாமி கும்பிட சொல்வது தவறா? எங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் சாமி கும்பிட சொல்கிறோம். இதை இப்படியே விட்டால் சாமி கும்பிடுவது வழக்கத்தில் வந்து போய்விடும். அதை அப்படியே மழுங்க செய்வது சரியா? எல்லோருக்கும் எல்லா விஷயத்திலும் நினைவூட்டல் என்று ஒன்று தேவை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications